பக்கங்கள்

வெள்ளி, 25 அக்டோபர், 2019

சேர்த்திடும் செல்வமும் 6 விதிமுறைகளும்! (1)

மனித வாழ்வுக்கும், வளத்திற்கும் செல்வம் (ஓரளவு) தேவையே; ஆனால் செல்வத்தை மாய்ந்து, மாய்ந்து அலுப்பு சலிப்பின்றி, நேர் வழியில் மட்டுமல்லாது; குறுக்கு வழிகளிலும், கோணல் புத்தியைத் துணைக் கொண்டும் அளவுக்கு மீறி செல்வம் சேர்த்திடுவோரின் இறுதிக் கால வாழ்வு எப்படி துன்பக் கடலில் தத் தளிக்கும் துயர்தரு வாழ்வாக உள்ளது என்பதை அன்றாட வாழ்வில் ஆயிரம் பேர்களின் அவதிக் கதைகளைக் கேட்டும், பார்த்தும் தானே வருகிறோம்! என்றாலும் பலரும் படிப்பினை பெறுவதில்லை.

"குறைவற்ற செல்வம்" எது தெரியுமா? வங்கிகளில் உள்ள சேமிப்பு  - டெப்பாசிட் அல்ல. 'மறை - பொருள்' என்ற புது சொற்றொடருக்கு வருமான வரித்துறை மூலம் பதவுரை, பொழிப் புரை எழுதுவதல்ல நண்பர்களே!

நீண்ட காலம் முன்பே நமக்கு எளிதில் கிடைத்த ஒரு மூதுரை.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" எவ்வளவு எளிமையான வாக்கியம் பார்த்தீர்களா?

நல்ல உடல் நலம் தான் குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து கொள்ளாத பல பெரிய மனிதர்கள், அரசியல் தலைவர்கள், மேதைகள் எல்லாம் அதற்கான விலையை - விளைவாகக் கொடுத்துக் கொண்டு இருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம்.

செல்வத்தை சம்பாதிப்பதில் தவறு இல்லை. பணம் - செல்வம் இல்லாமல் 'வாழ்வில்லை' இன்றைய சமூகத்தில்...! புரிந்துள்ளோம் என்றாலும் ஓடிவரும் காட்டாற்று ஆசைகளை ஒழுங்குபடுத்தி அணை கட்டி, அதில் நீரைத் தேக்கி, புனல் மூலம் பசுமை, அனல் மூலம் மின்சாரம் என்றுகூட சமூகத்தை வாழ்விக்கலாம் அல்லவா?

அதுபற்றி ஏன் பெரும்பாலான செல்வத்தை வழிபடும் சிந்தனையற்ற சிறுமதியாளர்கள் நினைப்பதில்லை. காட்டாறு வெள்ளம் காட்சியாக கரையிலிருந்து பார்க்கும்போது களிப்புதரும் கவின்மிகு காட்சிதான். அட்டியில்லை! ஆனால் பயன் ஏதுமின்றிக் கடலில் கலக்கும் முன், மக்களை வெள்ளத்தின் மூலம் அழிவையும் ஏற்படுத்தி பாடத்தை எடுக்கிறதே - அதுபோலத்தான் செல்வத் தேடிகள் ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்!

செல்வம் நமது பணியாளராக இருக்கும்வரை அதன்பயன் விழுமியதுதான்! ஆனால் அது நமக்கு  - மனிதர்களுக்கு - எஜமானன்  - "முதலாளி" ஆகும் போது தான் ஆபத்துக்கு அச்சாரம் பெற்று விட்டோம் என்ற நிலை உருவாகிறது!

செல்வம் சேர்க்கப்படுவதற்கும், அதனைத் துய்த்து மகிழுவதற்கும் அடிப்படையான ஆறு (6) விதிகளைக் கடைப்பிடித்தால் நேரிய வழியை விட்டு விலகாமல் என்றும் மகிழ்ச்சி குன்றா மக்களாகவே நாம் வாழ முடியும்!

1. முதல்விதி:

சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சேமிப்புக்காக ஒதுக்கி விடுங்கள்.

வருமானத்தில் 10 விழுக்காட்டையாவது குறைந்த பட்சம் மிச்சப்படுத்தி, சேமிப்பது அவசிய, அவசரமாகும். நாம் எதிர்பாராத திடீர்ச் செலவுகள் வரலாம் அன்றோ! அப்போது எவரிடமாவது போய் கையை நீட்டுவதா? தேவையில்லையே!

2. இரண்டாம் விதி:

சேமித்ததை சரியான வகையில் பாதுகாப்புடன் அது பெருகும் அளவுக்கு முதலீடு (Invest) செய்தல் மிகவும் முக்கியம். சேமிப்பு நியாயமாகப் பெருக வேண்டும். உடல் முழுவதும் பலமானால் அது வளர்ச்சி! குறிப்பிட்ட ஒரு பகுதி உடல் மட்டும் திடீர் என வளர்ந்தால் அதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல; வீக்கம். நோயின் அறிகுறி என்றே பொருள்! சேமிப்பதில் 'திடீர் பெருக்கம்' என்ற அதிக வட்டி, என்றெல்லாம் வரும் பெரிய விளம்பரத்தைக் கண்டு, ஓய்வு பெற்ற பெரிய அதிகாரிகளாக இருந்தவர்கள்கூட பேராசை யினால் கைப் பொருளை இழந்து, "டெப்பாசிட் இழந்தவர்கள்" சங்கத்தில் உறுப்பினர்களாகி, இழந்த பணத்திற்கு வட்டி கட்டுவதுபோல அல்ல, கூடுதலாகவும் செலவு செய்த மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது! எனவே, சரியான வகையில் முதலீடுகள் (Invest) செய்தல் மிகவும் அவசியம். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாக வேண்டும்.

(மற்றவை நாளை)

- விடுதலை நாளேடு 25 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக