பக்கங்கள்

செவ்வாய், 1 ஜனவரி, 2019

புதுமைக்கும் மறுபக்கம் உண்டே!



இன்று ஆங்கிலப் புத்தாண்டு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், ஓர் கால அளவையின் வெளிப்பாடு!

உலக முழுவதிலும் ஒருவருக் கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டு, வாழ்த்துகளை தெரிவிப்பது வழமை. இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு பலர் புதிய முடிவுகளை, உறுதிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திட முயல்வது; சிலர் பாதியிலேயே முடிவு களைக் கைவிட்டு 'பழைய கருப்ப னாகவே வழமை போல் மறுபடியும் தொடருவது.  இப்படி நடைபெறுவதும் நடைமுறையில் நாம் காணும் காட்சி தானே!

அதிவேக அறிவியல் வளர்ச்சி அதன் தவிர்க்க இயலாத பக்க விளைவுகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் அதேபோல துன்பத் தையும், தொல்லையையும், துயரத்தையும் கூட தரத்தான் செய்கிறது!

எடுத்துக்காட்டாக, கைத்தொலைபேசி (Cell Phone) இருந்தால் பெரிய பாதுகாப்பு - பல ஆபத்துக்களிலிருந்து மீள, உடனே தகவல் கொடுக்க, அல்லது தகவல்களைத் தோண்டி உண்மைகளைக் கண்டறிந்து பல குற்றங்களைக்கூட துப்புத் துலக்க மிகவும் பயன்படுகிறது என்ப தெல்லாம் நன்மைகள் பக்கம்.

ஆனால் அதே கைத்தொலைபேசி நமது மனித உறவுகளின் மாண்பைக் குலைத்து பல நேரங்களில் குடும்பத்தவர்களைக்கூட தனித் தனியே பிரித்து ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு, பாசம், ஒன்றுபட்டு கலந்துரையாடல், கூடிக் குலவி பேசி மகிழ்ந்திடும் வாய்ப்பைக் காணாமற் போகும்படிச் செய்து விட்டதே!

'செல்ஃபி' (Selfie) எடுக்கிறோம் என்று தொல்லை நம்மை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது. அன்பு 'அம்பாகி' மாறி குத்தித் தொலைக்கிறது!

அந்த (செல்போன்) கைத்தொலைபேசி பெண்கள் பாதுகாப்புக்குரிய நல்லாயுதமாகப் பயன்படும் என்று கருதி, நடைப்பயிற்சிக்கு எடுத்துப் போகும் போது, அதனைப் பறிப்பதற் கென்றே இரு சக்கர வாகனங்களில் வருவது, பறித்துக் கொண்டு பறப்பது, பற்பல நேரங்களில் உயிரைக் காப்பதே பெரிய முயற்சியாக மாறி விடுவதும் நடைபெறுகிறதே!

தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதில், துப்பாக்கியால் சுடும்போது ஓசையே கேட்காமல் சுட்டுக் கொன்று விட்டு, கொலைகாரர்கள் தப்பிச் செல்ல அதிக வாய்ப்பு ஏற்படுகிறதே!

இந்திய மனிதச் சராசரி ஆயுள்  இரு நூற்றாண்டுக்கு முன் 10,12 ஆக இருந்தது. இப் பொழுது 70ஆக உயர்ந்துள்ளது!

மனிதனின் ஆயுளைப் பல மடங்கு பெருக்கி யிருக்கும். மருத்துவ வளர்ச்சி ஓர்புறம் என்றாலும், மரண அடையாளத்தை எளிதில் புலனாய்வுத் துறையினரே  கண்டுபிடிக்கப்பட முடியாத, மெல்லக் கொல்லும் நஞ்சு(Slow Poisoning drug) மருந்தினை ஊசி மூலம் செலுத்தினால் அது நம் உடல் உறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாகி அழித்து, மரணத்தை உடனே மற்ற விஷம் போல ஏற்படுத்தாது. 3 அல்லது 6 மாதங்களை கழித்து ஏற்படுத்துமாம்! ஈரல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் போன்றவைகளைப் பாழாக்கி, பணி செய்யாமல் ஆக்கி சாவை வரவழைக்குமாம்! கேட்கவே அச்சமாக இல்லையா?

எனவேதான் பகுத்தறிவுள்ள மனி தர்கள் - அறிவியலைக்கூட ஆக்கத் திற்கே செலவழிக்க முயல வேண்டும். மனித குல அழிவிற்கு அழைப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது என்றுதான் உழைக்க வேண்டும்.

மனித குலம் வளர   பயன்படவேண்டிய புதுமை, புத்தாக்கம் அழிவிற்கு அச்சார மாகி விடலாமா?

எதற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா?

எச்சரிக்கையுடன் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவோமாக!

எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) வராமல் - மனதில் அவைகட்கு இடம் தராமல் - அவற்றை விரட்டி அடித்து, ஆக்கபூர்வ, எதையும் நல் நம்பிக்கையுடன் எதிர் நோக்கி செயல்படும் ஆக்க பூர்வ சிந்தனைகளையே  (Positive Thoughts)  இவ்வாண்டு வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயலுவேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

நன்றி காட்டுதலை தலையாய பண்பாக, பழக்கமாக கொள்ளுங்கள். அந்த உறுதி ஆண்டு முழுவதும்கூட அல்ல வாழ்நாள் முழுதும்கூட

'பழி வாங்கும் உணர்வுக்கு' இடமே தராதீர்!

'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்பதை எண்ணினால் அது நம் சிந்தனை - செயலாக்கத்தின் விளைவு என்பது ஆழ்ந்து சிந்தித்தால் எளிதில் புரியும்.

- விடுதலை நாளேடு, 1.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக