பக்கங்கள்

சனி, 1 ஜூன், 2024

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1,2.3)

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

2a

மனிதர்களாகிய நமக்குள்ள பெரிய வாய்ப்பு ஆறாம் அறிவாகிய  "பகுத்தறிவு" என்ற சிறந்த தனித்தன்மை அறிவாயுதம்!

அதன் காரணமாக அறிவியல்- தொழில் நுட்பப் படைப்பாற்றலில் மனிதர்கள் வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனையாளர்களாக மாறி, நிலைத்து என்றும் வாழுகின்றனர்!

அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்கள்  - அவர்கள் வெல்ல வேண்டிய முக்கிய எதிரியை சரியாக அடையாளம் காணவே தவறக் கூடாது.

இத்தகைய மனிதர்களின் எதிரிகளை வெளியில் அவர்கள் தேட வேண்டாம்; சற்று அமைதியாக தனித்து அமர்ந்து, சிந்தித்துப் பார்த்தால் அவை புலப்படும்.

உண்மை எதிரிகள் - அல்லது பதுங்கியுள்ள எதிரிகளான அவர்கள் ஏவுகணையாகி அதே மனிதர்களை அழிக்கப் பயன்படும். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டால் போரின் வெற்றி அய்ம்பது விழுக்காடு உறுதியாகி விடுவது உறுதி!

அந்த மூன்று எதிரிகளை வெளியில் தேடாதீர்கள், உங்களுக்குள்ளேயே 'திரிசூலம்' போன்று அந்த மூன்று எதிரிகள் உள்ளனர்.

(1) தன் முனைப்பு 

(2) பொறாமை

(3) புகழ் வேட்டை

தனி வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இந்த மூன்று எதிரிகளை வென்று விட்டால் அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்ந்து நிற்பது உறுதியிலும் உறுதி!

முதல் எதிரி - நமக்குள்ளே கிருமிபோல ஊடுருவி நம்மையறியாமலேயே நம்மை வீழ்த்தும் எதிரிதான் இந்த தன்முனைப்பு (Ego) என்ற நம் எதிரி!

தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தி, தகுதிக்கு மேல் பெருமை அல்லது பதவிகள், பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அது 'கணவன் - மனைவி'யாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும்  வளர்ந்து வருகிறவர்கள் ஆனாலும் சரி, தன்னுடைய உழைப்பும், நாணயமும் தன்னை எப்போதும் உயர்த்தும் என்று எண்ணி நிம்மதியாக இல்லாது -  குறுக்கு வழியில் 'பரமபத விளையாட்டு' விளையாட முனைந்தால்...  (இதை ஆங்கிலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள - Snake and Ladder - 'பாம்பும் ஏணியும்' விளையாட்டு என்றும் கூறுவர்). ஏணியில் திடீரென்று ஏறி உயர நினைத்து 'நானே அறிவாளி', 'நானே ராஜா', 'எனக்கே எல்லாம்' என்ற அகம்பாவத்தினால் உந்தப்படும் பலர் "பாம்பு கடித்து" கீழே வர வேண்டியதாகி விடும். மனிதர்கள்  இப்படி வீணே தேவையற்ற இழப்புகளைத்தான் சந்தித்து சரிந்து போகிறார்கள்!

உழைப்பும், உண்மையும் எப்போதும் நம்மை உயர்த்தவே செய்யும். சிற்சில நேரங்கள் இதற்குக் காலதாமதம் ஆனாலும், நிச்சயம் என்றோ ஒரு நாள் அது வந்தே தீரும். வராவிட்டால் தான் என்ன? நம் மனத் திருப்திக்கு நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் அதன் பலன் கனிந்து நமக்குக் கிடைக்காவிட்டாலும்   நாமடையும் இன் பத்திற்கு ஈடு இணை உண்டா? மனித மகிழ்ச்சிக்கு அடிப்படை திருப்தியும் நிம்மதியும்தானே!

2) பொறாமை என்ற எதிரியைவிட மிக மோசமான எதிரி மனிதனுக்கு வேறு கிடையாது!

இது எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்பதை பல மனோ தத்துவ நிபுணர்கள்கூட கண்டறியவில்லை! முடியவில்லை!

ஓடுகிற சில வாகனங்களில் திடீர் நெருப்புப்பற்றி எரிந்து வாகனத்தை மட்டுமல்ல; உள்ளே இருந்து பயணம் செய்தவர்களையும் பலி கொள்ளு கிறதல்லவா? அதுபோல மின்னல் தாக்கி சிலர் மரணிப்பதில்லையா அவைபோலவே இது! அதை வள்ளுவர் எவ்வளவு நாசூக்காக எடுத்துத் துரைக்கிறார் பார்த்தீர்களா!

'அழுக்காறு உடையவர்களுக்கு அது சாலும்' இந்த ஒரு வரியை நின்று நிதானித்து அசைபோட்டு சிந்தித்துப்பாருங்கள்.

யார்மீது பொறாமை ஏற்படுகிறதோ - அவர்கள் இதில் குற்றம் இழைக்காமலேயே தண்டனைக் காளானவர்களாவது ஒரு வினோதம் போன்ற கொடுமையல்லவா?

என் நண்பர் கார் வாங்கினால், நடந்து அல்லது பேருந்தில் செல்லும் எனக்கு ஏன் 'பொறாமை' வர வேண்டும்?

மகிழ்ச்சி அடைய வேண்டிய முதல் நபர் நானாகத்தானே இருக்க வேண்டும்? காரணம் "அவர் ஏழையாக இருந்தால் என்னிடம் கடன் கேட்பார்; நான் மறுத்தால், எங்கள் நட்பு முறியும் வாய்ப்பு உள்ளதே, இதன் மூலம் அத்தகைய ஒரு இக்கட்டு, இடர்ப்பாடு தவிர்க்கப்படுகிறது" என்று மகிழத்தானே வேண்டும்.

பின் ஏன் வீணான பொறாமை? அது அர்த்தமற்று ஏற்படும் காரணம் கண்டறிய வேண்டுமா?

கண நேர 'ஊடுருவல்' பொறாமை உணர்ச்சி தான்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2)

2a

'பொறாமை' என்பதற்கு உருவம் கிடையாது; அது ஒரு வகையான நோய். இந்த நோயின் கிருமிகள் மனநல மருத்துவர்களின் ஆய்வில்தான் - அதுகூட 'பளிச்' சென்று தெரியாத வகையில் புலப்படக் கூடும்!

மனிதர்களின் வாழ்க்கையில் சீர்கேடுகள் மலிவதற்கும், செயற்கையான துன்பங்களும், கவலைகளும் மின்னலைப் போல், இடியைப் போல் தாக்குவதுபோலும் இந்த பொறாமை உணர்வு!

இந்த பொறாமை நோய் - மற்ற நோய்களைப் போலவே அனைவருக்கும் அனைத்து இடங் களிலும், நேரங்களிலும் உருவாகக் கூடும்!

'ஒரு மனதாயின' கணவன் - மனைவிக்கும் இடையில்கூட இந்த நோய் புகுந்து இணைப்பு களைத் துண்டிக்கும் அளவுக்குத் தொல்லை தரக் கூடும்.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ குடும்பங் களில் படித்த மனைவிமார்கள் - அவர்களை - பல ஆண்கள், துணைவியராக, வாழ்விணையராகவே கருதிடாமல் நடத்தும் ஆதிக்க மனப்பான்மை யாளர்களாக இருப்பதால், எஜமான் - அடிமை என்பதைப் பிரதிபலிக்கும் 'கணவன் - மனைவி' என்ற சொற்களையே இங்கு பயன்படுத்துகிறேன்.

அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் கூடுதல் ஊதியம், கூடுதல் பெருமை  - புகழ் கண்டு பூரிக்க வேண்டிய கணவர்களேகூட, அவர்களை அறியாமல் தன்னைவிட தன் மனைவிக்கு இவ்வளவு புகழா என்று எண்ணிப் புழுங்கிடுவதும், நாளடைவில் அந்தப் புழுக்கம் பல மனப்புண்களையும், அந்தப் புண்களிலிருந்து சில பொறாமைப் புழுக்கள் முழு வடிவம் எடுத்து 'ஆட்கொல்லி' ஆவதும் - வாழ்வு வெறும் கானல் நீர் வேட்டையாவதும்  - நம் கண்முன் கண்ணாலே காணும் காட்சிகள்தானே!

மகிழ்ந்து கொண்டாட வேண்டியவர்களே அதற்கு நேர் எதிரான மன நிலையைப் பெறுவதுடன், தேவையற்ற துன்பத்தைத் தாங்களே வரவழைத்து அல்லல் உறுவதும் கண் முன்னே காணும் அன்றாடக் காட்சிகள் - பல குடும்பங்களிலிருந்து...

"என்னைவிட நீ பெரிய ஆளா?"

"என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாயா"

"என்னை அலட்சியப்படுத்திப் பார்க்க வைக்கிறதா?" என்று தாங்களே கற்பித்துக் கொண்ட ஓர் இல்லாத நோயினால், பொல்லாத துன்பத்தை இலை போட்டு அழைக்கிறார்கள்!

என்னே வேதனை வெட்கம்!

தன் முனைப்பு பொறாமையாகவும் மாறிவெடிக்கிறது  - பொறாமையோடு, தனக்கு வராத பெருமை வேறு யாருக்கோ வருவதா என்று ஒரு தவறான எதிர்பார்ப்பு - தப்புக் கணக்கு!

இவை இரண்டையும் சிறிய கோடுகளாக்கி விடும் மிகப் பெரிய மற்றொரு அவலம் - தனி மனிதர்களின் புகழ் வேட்டை!

எப்போதும் எதிலும் தாங்களே 'முன்னால் என்ற பெயர் நாளும் தவறாமல் செய்தி ஏடுகளில் வர வேண்டும் என்பதற்காக கூலி எழுத்தாளர்களை வைத்து அறிக்கை சாம்ராஜ்யம் நடத்தும் அரசியல்வாதிகள்  - கட்சித் தலைவர்கள் பலர் உண்டு!

தற்கொலை செய்ய முயற்சித்து தோற்ற ஒருவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு விசாரணை வந்தது!

"'என் பெயர் பேப்பரில் வர வேண்டும்' என்ற ஆசையினால் இப்படிச் செய்தேன்" என்று அந்தநபர் நீதிபதிமுன் சொன்னார்!

 இந்தியன் பீன்ல்கோட் (I.P.C.) - இ.பி.கோ. என்ற குற்றவியல் சட்டத்திலேயே இந்த தற்கொலைக்கான தண்டனைபற்றிய ஒரு பிரிவு - ஒரு விசித்திர சட்டப் பிரிவு ஆகும்! எப்படி?

ஒரு குற்றத்தினை செய்ய முயற்சித்தால் சட் டப்படி தண்டனை,  முயற்சியில் வெற்றி - அதாவது தற்கொலை முயற்சி நிறைவேறி விட்டால், எந்தத் தண்டனையும் கிடையாது. காரணம் வெளிப்படை - இறந்தவருக்கு எப்படி தண்டனையைக்  கொடுக்க முடியும்!

வேடிக்கையான சட்டப்பிரிவு! 

ஊடக வெளிச்சம் என்பது தாங்கள் பெறும் புகழ் விளம்பரத்திற்கு முக்கியம் என்பதால் சிலர் வலிய சென்று ஊடகவியலாளர்களின் நட்புற வுக்காக எதையும் செய்வார்கள்!

சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் தலைவர் களைப் புகழ வார்த்தைக் கோர்வைகளை எழுதிக் கொடுத்து அதை ஒரு  வருவாய்க் களமாகவே ஆக்கிய வேடிக்கையான 'வருவாய்த்துறை'க்கும் கூட நம் நாட்டில் பஞ்சமில்லை. புகழ் வரலாம்; வரட்டும். அது தானே சுயமாக வந்து மூடிய உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3)

13

புகழ் வேட்டை என்பது புலி வேட்டையை விடக் கடுமையானது! ஏன் சில நேரங்களில் கொடுமையானதும்கூட!  

பொதுவாக 'வேட்டையாடுதல்' என்பதற்குள் பொதிந்துள்ள பொருளே, தேடிச் சென்று பிடித்துக் கொண்டு வருதல் என்பதுதானே!

தானே வந்தால் தான் அது உண்மையாகவே 'புகழ்!'

இன்றேல் இடையில் வந்தால் 'இகழ்' அது!

தேடிப் பிடித்து வருதல் என்பது கொச்சையாக சொல்ல வேண்டுமானால் ஒருவகை வன்புணர்ச்சி இன்பமாகும்!

'புகழ்' என்பது தானே கனிந்த பழத்தின் ருசியாக இருக்க வேண்டுமே தவிர, மருந்து.. போட்டு செயற்கை முறைகளால் பழுக்க வைத்த விரும்பத்தகாத பழம் போன்று இருக்கலாமா?

தேடி, தானே வரும் புகழ் நிலைத்த புகழ்! செயற்கையாக 'நாமாவளி' பாட வைத்து கேட்டு ரசிக்கும் புகழ் கூலிக்கு மாரடித்தவர்களின் ஒப்பாரியின் எதிர் நிலை உவமையாகும்!

சில கட்சிகள் - திடீர்த் தலைவர்கள் தங்க ளுக்குப் "புகழ்" சம்பாதிக்க சில கூலிப் படைகளை 'கூவும் படைகளாக்கி' சில இடங்களில் "வாழ்க, வாழ்க" முழக்கம் போட்டு கடைசியில் காணாமல் போன செலவுக் கணக்குகள் ஏராளத்தைக் கண்டு சுவைத்தது உண்டா?

நல்ல வேடிக்கை நகைச்சுவைகள் இவை. சிலர் -  போலிப் பட்டங்களை விலைக்கு வாங்கி (200 டாலர் 'டாக்டர்' பட்டங்கள்கூட உலகெங்கும் உள்ள போலிப் பல்கலைக் கழகங்களால் தரப் படுகின்றன!)  அப்படி டாக்டர்களாகும் மன நோயாளிக்கு இறுதியில் மிஞ்சுவது துயரமோ, துன்பமோ தானே!

உண்மையாகவே ஆய்வு மூலம் பெற்ற பட்டங்களின்மீதுகூட சாயம் அடித்து, விஷமத் தனப் பிரச்சாரம் செய்யும் கோயபெல்சின் குருநாதர்கள் இந்த பித்தலாட்டத்தைக் கண்டும் காணாத கனவான்கள்!

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்ற குறளைக் கூட சிலர் தவறாக, 'பிறக்கும்போதே புகழுடன் பிறக்க வேண்டும்' என்று பொருளுரை கூறியபோது, பகுத்தறிவாளர்கள் தான், ஒரு குறுக்குக் கேள்வியை கேட்டு சரியான விளக்க வுரையை அக்குறளுக்குத் தந்தார்கள்!

ஒருவர் தோன்றும்போது, - பிறக்கும்போது என்று பொருள் கொண்டால், பிறக்கும்போது ஒருவர் எப்படி புகழோடு பிறக்க முடியும்? வாழும்போதுதானே அவர்தம் சீரிய சிந் தனைகளால், செயல் திறன் - சாதனைகளால் பெருமை, புகழ் எல்லாம் அடைய முடியும்? அதற்குச் சரியான பொருள் "தோன்றிற் புகழ் என, எந்த அவையில், அரங்கில்  நிற்கும்போது அவர்தம் ஆற்றல் என்பது புகழ் ஈட்டித்தரத் தக்க வகையிலான களச் செயலாக அமைதலே காரணமாக வேண்டும்" என்ற பொருள் விளக்கமே சரியான, பொருத்தமான விளக்கமாக இருக்கிறது.

புகழ் வெளிச்சத்தின்கீழ்... (சில விளக்கொளி களைக் கற்பனை செய்து பாருங்கள்)

மற்ற இடங்களில் எல்லாம் பரவி ஒளி விடும் வெளிச்ச விளக்கைச் சுற்றி ஒருவகை சிறு நிழல் வட்ட இருள் போன்ற ஒன்று இருக்கச் செய்யும்!

இதனை எதற்கு, உவமையாக கூறினால் பொருத்தம்? சற்றே எண்ணிப் பாருங்கள்.

பெரிய பெரிய தலைவர்கள், ஆய்வாளர்கள், செயல் திறனால் புகழ் வெளிச்சம் பெற்றவர்களின் அருகில் அவர்களுக்கு உதவியாளராக உள்ளவர்கள்தான் அந்த சிறு வட்ட - வெளிச்சம் பாயாத இருள் பகுதி.

அவர்களில் யார் யார் அவசரப்படாமல் - தன் கடன் தலைமைக்கு உதவுவதே, ஆய்வுப் புலமை அருகில் இருக்க மேலும் கற்று தானே வெளிச்சம்  தரும் விளக்காய் ஆகும் தகுதி பெறும் வரை பொறுமை காத்து நிற்பதே அவர்களின் நிரந்தரப் புகழ் ஈட்டுதலுக்கு - நீடு புகழ் நிலைத்த புகழ் தங்கும் புகழாக அமைந்து தகத்தாய ஒளியுடன் இறங்கி சிறக்கும் தரணி முழுவதும்!

விலை கொடுத்து வாங்கும் புகழ், காலையில் பூத்து மாலையில்கூட அல்ல - மதியத்திலேயே உதிரும் மண மற்ற மலர்போலும் ஆகி விழும்!

எனவே புகழுக்காக கதவைத் தட்டாதீர்கள்!

புகழ் வந்து உங்கள் கதவை தட்டித் திறக்கட்டும்

அதன் பிறகுதானே வாசனையும் நிரந்தரம் ஆகும்  - இல்லையா?

போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!


 போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!

6

பல்வேறு தொடர் பணிகளுக்கிடையிலும் எனது 'இளைப்பாறல்' (Relaxation) பல்வேறு புத்த கங்களைப் படித்துப் புத்துணர்ச்சி பெறுவதுதான்!

இப்போதெல்லாம் புத்தக வாசிப்பு பெருகி வருகிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும் - நமது இளைஞர்கள், மாணவச் செல்வங்கள், புத்தகங்களைப் படித்து, தங்க ளுடைய சிந்தனை - செயலாக்கத் திறனை  (Creativity) வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமான நேரம் இணையத்தில் - அதிலும் குறுஞ்செய்தி, தேவையற்ற அக்கப் போர் - சிலரின் டைரிக் குறிப்பான சுய புராணப் பெருமைப்படலங்கள் மூலம் தங்களது அரிய நேரத்தை வீணடித்து வருவது வேதனைக்குரியது.

நல்ல நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும். 'கசடுஅற கற்பதும் அதன்படி நிற்பதும்' இணைந்து நடந்தால் மனித குலம் மகத்தான ஞானம் பெறுவதோடு, ஞாலமும் பயனுள்ளோரின் கூட்டாகக் காட்சியளிக்கும்.

சென்ற மாதத்தில் நடந்த, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்த - ஸ்காட்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பிச்சைமுத்து அவர்களது அந்நூல் வெளியீட்டு ஆய்வில் கலந்துகொண்டேன்.

அப்போது அந்நூல் வெளியீட்டாளர்களான நிகர் மொழி பதிப்பகத்தார் நண்பர்கள் அ. பிரபா கரன், ஜெ. ஜோன்சன் மேடையில் புத்தகங்களை எங்களுக்கு வழங்கி 'அறிவுக்குளியலுக்கு' வாய்ப் பளித்தனர்.

4

பல அருமையான பயனுறு புத்தகங்கள்

குறைந்த விலை; நிறைந்த சரக்கு மிடுக்கு

அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் அற்புத விளக்கங்கள்.

இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் சனாதனத் தொற்று பழைமைவாதம், புதிய கோப்பையில், விஞ்ஞான விளக்க போலி 'லேபிள்' ஒட்டப்பட்டு பரப்பப்படும் இன்றைய கால கட்டத்தில் எது அறிவியல்? எது போலி அறிவியல் என்பதை டாக்டர் சட்வா MBBS DA DNB  அவர்களின் "போலி அறிவியல், மாற்று மருத்துவம்  மூடநம்பிக்கை ஒரு விஞ்ஞான உரையாடல்" என்ற புத்தகம் மூலம் அருமையான கருத்துச் செறிவுடன் கூடிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்கள் - 44 தலைப்புகள் - விலை 100 ரூபாய்தான்.

அறிவியல் - Science,  போலி அறிவியல்       - Pseudo Science  என்பனவற்றை  விளக்கி வேறு படுத்திக் காட்டும்.   நிகர்மொழி பதிப்பகத்தாரின் பணி பாராட்டப்பட வேண்டிய அரும்பணி! அறிவுத் திருப்பணி. 'ஏன் இந்நூல்?' என்ற முதல் தலைப்பில் உள்ளவற்றை அப்படியே தருகிறோம்.

படியுங்கள் - பிறகு ஈர்ப்பு தானே வரும்.

"ஏன் இந்த நூல்?"

5

'ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்'

"நோய்களை எதிர்த்து மனித இனம் தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாகப் போராடி வருகிறது. நோய்கள் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மாயா ஜால அமானுஷ்ய கதைகளை நம்பி யிருந்த காலத்தில் இருந்து, எதிர் காலத்தில் என்ன விதமான நோய் ஒரு மனிதனுக்கு வரும் என்று ஒருவரது 'ஜீன்களை' ஆய்வுசெய்து, பிறக்கும் போதே கணிக்கும் மரபியல் விஞ்ஞான உலகுக்குள் நாம் பரிணமித்து வந்திருக்கிறோம்.

இவ்வுலகின் மொத்த மக்கள்தொகை இரு நூற்று அய்ம்பது கோடியாக கி.பி. 1950இல் இருந் தது. அது கி.பி. 2000த்தில் அய்ந்நூறு கோடிக்கும் மேல் உயர்ந்தது. மேலே குறிப்பிட்டுள்ள வெறும் அய்ம்பது ஆண்டுகால இடைவெளியில் உலகின் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந் தமைக்குக் காரணம் நவீன விஞ்ஞான மருத்துவம் ஆகும்.

குறிப்பாகப் பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, பிளேக், இன்புளூயன்சா முதலிய தொற்று நோய்களானது, தடுப்பூசிகள் மற்றும் இதர பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதே இவ்வாறான திடீர் மக்கள் தொகை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. 

ஜேரட் டைமண்ட் எனும் ஆய்வாளர் எழுதி யுள்ள 'கிருமி, துப்பாக்கி மற்றும் இரும்பு' (Guns, Germs and Steel) எனும் நூலில் 'கிருமிகளின் வழியே பரவும் நோய்கள் உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிவிட்டது' என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்டோபர்  கொலம்பஸ் 1492 இல் அமெரிக்கக் கண்டத்தில் நுழைந்த போது அவரது குழு பல்வகை தொற்று நோய்களையும் சேர்த்தே அமெரிக்கக் கண்டத்தில் நுழைத்தது. விவசாய சமூகமாக ஓரிடத்தில் குவிந்து வாழ்ந்த அய்ரோப்பியர்கள், அமெரிக்கப் பழங்குடிகளுக்கு முன்னரே பல்வகையான பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருந்தனர். ஆனால், வேட்டை சமூகமாக இருந்த பழங்குடிகள் இந்த எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருக்கவில்லை . இந்த ஒரு காரணம் அய்ரோப்பியர்கள் எளிமையாக அமெரிக்கப் பழங்குடிகளை வீழ்த்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது. 

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1947இல் முப்பத்து ஒன்று வயதாக இருந்தது. அது 2015இல் அறுபத்து எட்டு வயதாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நோய்களும், அதற்கு எதிரான விஞ்ஞான மருத்துவமும் மனித இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை பெற்றவையாக இன்றும் உள்ளன.

அதே சமயத்தில் நவீன விஞ்ஞான மருத்துவம் வியாபாரமாகிப் போனது பற்றியும் நாம் ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டியுள்ளது. சேவைத் துறையில் வியாபாரம் செய்யலாம் என்ற உலக மயமாக்கலின் உபவிளைவு மருத்துவத்தையும் ஒரு வியாபாரப் பண்டமாக மாற்றியுள்ளது. சந்தை பொருளாதாரமே சிறந்தது என்ற ஆபத்தான முதலாளித்துவ கருத்தும் மேல்தட்டு மக்களி டையே விதைக்கப்படுகிறது.

இந்தப் புத்தகத்தின் வழியே நாம் நோய்களின் வரலாறு, விஞ்ஞான மருத்துவத்தின் அடிப்படை, போலி அறிவியல் செயல்படும் விதம், மாற்று மருத்துவம் எனும் நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகள், அனைவருக்கும் தரமான சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி பல்வகை தலைப்புகளில் ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்."

அறிய வேண்டிய அரிய செய்திகள் அல்லவா?


அறிவியல் வளர்ச்சியும் - அர்த்தமில்லா மூடப் பழக்கமும்!


2a
அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) என்பது ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளைக் கேட்டு வளர்ச்சிக்கு வித்திடுவதேயாகும்!

ஆராய்ந்து அறிந்ததினால்தான் உலகம் இன்று செயற்கை அறிவுத் திறன் (Artificial Intelligence)  வரை வெகு வேகமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது! 

'வெறும் சடங்கு, சம்பிரதாயம், கண்ணை மூடிக் கொண்டு நம்பு, கேள்வி கேட்காதே என்பதே சனாதனம்  - என்றும் மாறாதது; மாறவே கூடாதது' என்பதே அதன் தத்துவம், இயற்கைக்கும், அறிவுக்கும் மாறான ஒன்று.

சிலவற்றினை விஞ்ஞானம் (அறிவியல்) போல் சித்தரிப்பார்கள். அது போலி அறிவியல் (Pseudo Science), உண்மை அறிவியல் அல்ல!

நம்புவது காரண காரியத்தோடு இருக்க வேண்டும் அல்லவா?

காரண காரியம் பற்றிக் கவலைப்படாமலே "என் முன்னோர் - தாத்தா, அவரின் கொள்ளுத் தாத்தா செய்தது. ஆகவே, அதனை நானும் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல் நம்புகிறேன்; பின்பற்றுகிறேன்" என்றால் அது ஒரு போதும், வளர்ச்சிக் கண்ணோட்டத்தில், பகுத்தறிவின் அடிப்படையில் ஏற்கத்தக்கது அல்ல! 

ஒரு உதாரணம்: தந்தை பெரியார் சொல்வார்: "சந்தைக்குப் போய் விட்டு வருபவன் குளிக்க வேண்டும் என்றால் - அது ஏன்? என்ற கேள்விக்கு, சரியான பதில் சொல்லாமல் 'என் தாத்தா அப்படித் தான் குளித்தார், என் தந்தையார் குளித்தார்; எனவே, நானும் குளிக்க வேண்டும் என்ற அய்தீகத்தைப் பின்பற்றுகிறேன்' என்றால் அது மூடநம்பிக்கை; வெறும் சடங்காச்சாரம்".

மாறாக சந்தையில் பல பேரை சந்திப்போம். தொற்று நோயும் பரவிட வாய்ப்பு அதிகம்; எனவே நம்மைப் பாதுகாத்து நல்வாழ்வு வாழ குளிக்க வேண்டியது அவசியம் என்று ஒருவர் விளக் கினால் அது அறிவு பூர்வமாக ஏற்க வேண்டிய ஒன்றாகும்.

அப்படியே கண் மூடித்தனமாக நம்புவதே 'ஆத்திகம்'; ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு விளக்கும் அறிவு பொருந்தியதே என்பதை அறிந்த பின்பு, பின்பற்றுவதே 'நாத்திகம்' என்றும் சரியான விளக்கம் தந்தார்!

எனது தந்தையார் (சி.எஸ். கிருஷ்ணசாமி) வைதீக நம்பிக்கையாளர்; வியாழன் மாலை தையற் கடையை விட்டு வெளியே கிளம்பி பல மணித்துளிகள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருப்பார். பறக்கும் கருடன் கண்ணுக்குப்பட வேண்டும். கன்னத்தில் போட்டுக் கொண்டு ('கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று கூறிக் கொண்டு) திரும்புவார்!

மின்னல் இடி இடித்தால், "அர்ச்சுனனை மின்னல் ஒளியாள் என்ற பெண் துரத்துகிறாள்.  அந்த சத்தமே இடி, வெளிச்சம்" என்று ஒரு விசித்திர விளக்கம் தருவதோடு, 'அர்ச்சுனா, அர்ச்சுனா' என்று முகவாய் கட்டை, தாடை பக்கம் போட்டுக் கொள்வார்!

அறிவியல் ரீதியாக ஒலி, ஒளி பற்றிய விளக்கம் என்பதைச் சொன்னால் அது அவருக்கு விளங்காது!

எங்கள் வீட்டின் கீழ் பகுதியைச் சுற்றி சுமார் 30, 40 நிமிடங்கள் நாள்தோறும் காலையில் நடைபயிற்சி செய்வேன். எங்கள் வீடு அடையாறு - சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு 10, 20 மணித் துளிகளில் செல்லும் தூரம் என்பதால், மேலே பறக்கும் விமானங்கள் தாழ்ந்து, எங்கள் வீட்டு மேலே பறந்து சென்றுதான் விமான தளத்தில் தரையிறங்கும்.

கரோனா கொடுந்தொற்று (Covid 19) கால ஊர் முடக்கத்தினால் எல்லோரும்  வீட்டில் இருந் தார்கள். விமான சர்வீஸ் ரத்து, எந்த விமானமும் பறக்கவில்லை.

ஆனால், அந்த முடக்கத்தை நீக்கிக் கொண்ட போது, சில மாதங்கள் கழித்து உள்நாட்டு, வெளி நாட்டு விமானப் பயணச் சேவைகள் திரும்பவும் செயல்படத் துவங்கின.

அத்தி பூத்ததுபோல ஒரு விமானம் மேலே பறந்தாலே வியப்புத்தான். ஏறத்தாழ ஒரு ஆண்டு இந்த நிலைதான். அதனால் பொருளாதாரச் சீர்கேடு - பின்னடைவு எல்லாம்!

நடை பயிற்சியின்போது, காலையில் குறைந் தது 2 முதல் 3 வரை விமானங்கள் பறக்கின்றன. வானத்தைப் பார்த்து - கன்னத்தில் போட்டுக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன்... காரணம் பொருளா தாரம் மீண்டு வருவதற்கு சுற்றுலா - விமானங்கள் சேவையின் தேவை எல்லாம் அதன் வெளிப் பாடுகள் அல்லவா?

என் தந்தை கருடனைப் பார்த்தார். நானோ விமானத்தைப் பார்த்து மகிழ்கிறேன்.