பக்கங்கள்

புதன், 30 மே, 2018

கேரளத்தில் ஒரு "பிளாரன்ஸ் நைட்டிங்கேல்!"



நவீன உலகத்தில் நவீன நோய்கள் - கிருமிகள் - தொத்து - இவைகளுக்குப் பஞ்சமே இல்லை.

மலேசிய நாட்டில் ஒரு நகரம் நிபா என்பது. அவ்வூரி லிருந்து ஒரு வகைக் கிருமிகள் பரவி, தலைவலி, காய்ச்சல், உயிர்ப்பலி என்று மக்களை வாட்டும் வைரஸ் நோய் கேரளத்தில் கொடுமையாக பரவி பலர் - தீவிர சிகிச்சையும் பலனிக்காது இறந்துள்ள வேதனையான செய்தி வந்து கொண்டே  உள்ளது!

கேரள மாநிலம் - கோழிக்கோடு மாவட்டம், பெரம்பரா மருத்துவமனையிலும் வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் சிலர் சேர்க்கப்பட்டிருந்தனர்! அவர்களுடைய சிகிச்சைக்கு லினி என்ற 31 வயதே ஆகியுள்ள செவிலியரும் (நர்ஸ்)  உதவி செய்து வந்தார். சிகிச்சையில் உதவிய இந்த நர்சையையும் அந்த நோய் விடவில்லை. இவரையும் தாக்கி அவரது உயிரைப் பறித்து விட்டது என்பது வேதனையான சோகச் செய்தி! கடந்த 20.5.2018இல்  அதே நிபா வைரஸ் நோயால் மரணமடையும்  நர்ஸ் 'லினி' தான் பெற்ற குழந்தைகளை, கணவன், குடும்பத்தினரைப் பார்க்காமல் உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்து மறைந்துள்ளார்!

அக்கடிதம் எல்லோரின் இதயத்தைக் கனமாக்கியதோடு, பிழியவும் செய்திருக்கிறது.

மற்றவர்களுக்கும் நோய் தொற்று அபாயம் இருப்பதால் லினியின் உடலைக்கூட அவரது குடும்பத் தினரிடம் கொடுக்கவில்லை; கேரள சுகாதாரத் துறையினரே தகனம் செய்து விட்டனர்! அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கண்ணீருடன் பங்கேற்றனர்.

லினியின் தாய் மாமன், 'லினி' தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொண்டும் அவர் உதவிடு வதிலிருந்து பின் வாங்காமல் "தன்னையே தியாகம் செய்கிறேன்" என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நர்ஸ் லினிக்கு சித்தார்த் (5), ரிதுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் பக்ரைனில் பணியாற்றுகிறார்.

லினி கவலைக்கிடமாக உள்ளதை அறிந்து 2 நாள் முன்பு அவர் வந்துள்ளார்.

குழந்தைகளையோ, கணவரையோகூட கண்டு வாழ்க்கையின் இறுதிப் பயணத்தில் பிரியா விடை பெற லினிக்கு வாய்ப்பில்லை. இதை ஏற்றுக் கொண்டு, தைரியத்துடன் அவர் தனது வாழ்விணையருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

"எனது முடிவை நான் நெருங்கிக் கொண்டி ருக்கிறேன். உங்களைப் பார்க்க முடியும் என்ற நம் பிக்கை எனக்கு இல்லை. நமது குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை உங்களுடனே வளைகுடா நாட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியே இருக்க வேண்டாம்!"

அன்புடன்

லினி

சாவின் அழைப்பிலும் தனி துணிச்சல் - தெளிவான உணர்வுகள்!

இத்தகைய சமூக தொண்டற வீராங்கனைகளை அரசுகள், சமூகம் பாராட்ட வேண்டும்!

சிங்கப்பூர் நாட்டில் முன்பு பரவி, பலரை உயிர்ப் பலி கொண்ட பறவைக் காய்ச்சலின் போது, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பாதுகாப்பு சிகிச்சை கொடுத்து, அந்நோய் தொற்று காரணமாக 2 செவிலியர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்!

அந்நாட்டு அமைச்சர்கள், அரசு அவ்விருவருக்கும் பெரிய அரசு மரியாதை செய்து பெருமைப்படுத்தினர்.

அதேபோல மத்திய, மாநில அரசுகளும், சமூக அமைப்புகளும் லினிக்கு மரியாதை, நினைவேந்தல் - செய்தல் அவசியம்.

அத்தகைய கடமை வீரர்கள், வீராங்கனைகள் வரலாற்றின் வைரங்களாக என்றும் ஜொலிப்பர் என்பது உறுதி!

அந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உழைப்பு - தொண்டறம் என்றும் மறக்க முடியாத சரித்திரத்தில் நிலை பெற்ற பெயர் அல்லவா!
- கி.வீரமணி
- விடுதலை நாளேடு, 23.5.18

வெள்ளி, 25 மே, 2018

இன்பம் எங்கே? எதில்?



உலகை உலுக்கிய சிந்தனைப் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.

இப்போது அவரது 200ஆம் ஆண்டு பிறந்த நாள் பருவம் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

அந்த மாமனிதர், மாணவப் பருவத்திலே பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி), த்ரியர் நகரத்தில், 'ஜிம்னேஷ் யம்' என்ற பள்ளியில் படித்தவர்.

'நீங்கள் யாராக ஆக வேண்டும்?' - இப்படி ஒருகேள்வி அவரது வகுப்பில் ஆசிரியரால் கேட்கப்பட்டபோது,

ஒரு மாணவன் மட்டும் தனித்தன்மையோடு "நான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் ஆக வேண்டும்" என்றார்.

இக்கேள்வியோடு நிறுத்திக் கொள்ளவில்லை அச்சுட்டி மாணவன்; பதிலையும் எழுதினான்.

"இந்த உலகிலேயே பெரிய பணக்காரன் மகிழ்ச்சி நிறைந்தவனா? ஒரு போதும் இல்லை. தன் செல்வத்தை அதிகரிக்கவும், இருப்பதை இழந்து விடாதிருக்கவும் ஒவ்வொரு நொடியும் கவலைப்படுவான்; அவனுக்கு மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாது."

"மிகப் பெரிய ராஜாதான் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பானா? இல்லவே இல்லை. தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும், உள்ளதைக் காப்பாற்றிக் கொள்ளவும் கவலைப்படுவான். அவனால் சரியாகத் தூங்கவும் கூட முடியாது!"

அப்படி என்றால் யார் மகிழ்ச்சியான மனிதன்? எழுதினான்....

"மற்றவர்களுக்காகச் செயல்படவும், கஷ்டப்படவும் வாய்ப்புக் கிடைக்கும் போதுதான் ஒரு மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறான்! எனக்கு அந்த மகிழ்ச்சிதான் வேண்டும்!"

அந்தப் பையன் இப்படி எழுதும் போது அவனுக்கு வயது 16.

பதினாறு வயதினிலே அவருக்குப் பூத்த காதல் - தொண்டறக் காதல்! சமூகத்தையும், அதில் அவதியுறும் மாமனிதர்களைக் காப்பாற்றுவது - உதவுவதில்தான் அவருக்குக் கொள்ளை இன்பம்!

எத்தகைய சிந்தனை பார்த்தீர்களா?

முளையும் பயிர் விளையும் போதே தெரிந்து விடுகிறது அல்லவா?

(இத்தகவலைத் தந்தவர் 'மேன்மை' இதழ் நண்பர் நாராயணமூர்த்தி என்ற எழுத்தாளர் - நன்றி)

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல                                  (குறள் 39)

வள்ளுவர் கண்ணோட்டத்தில் எது உண்மை இன்பம் - மேலே உள்ள குறளால் புரிந்து கொள்ளலாம்.

"அறவொழுக்கத்தில் வாழ்வதன் மூலம் ஒருவருக்கு விளைவதே இன்பம் ஆகும். அறம் அல்லாத வழிகளில் ஏற்படுபவனவெல்லாம் இன்பம் பயக்காதவை ஆகும். அவற்றால் புகழும் ஏற்படாது.

எல்லா இன்பத்திலும் நீடித்த நிலைத்த புகழோடு நிற்கும் இன்பம் எது தெரியுமா?

கிரேக்கத்துப் பெரியார், அறிஞர் சாக்ரட்டீஸ் செய்யாத குற்றத்திற்கு - 'ஹெம்லக்' என்ற விஷத்தை அருந்தி  மாளச் சொன்ன தண்டனையை நிறைவேற்றிய போது, விஷக்கோப்பை தான் அந்த மாமேதைக்கு இன்ப ஊற்றானது! நேற்றும், இன்றும், நாளையும் தலைமுறை தலைமுறையாக சாகாமல் சாக்ரட்டீசு வாழ்ந்து கொண்டே உள்ளார்!

29 வயதுகூட நிரம்பாத மாவீரன் நாத்திகன் பகத்சிங் தனது முறுக்கான வாலிபத்தை  1929 ஏப்ரல் 8 முதல் 1931ஆம் ஆண்டு மார்ச் 23 வரை - சுமார் இரண்டாண்டு காலம் சிறையில் இருந்தார்; சிந்தித்து தனது லட்சியத்தை அடைய அது சரியான விலை - உயிரையும் சேர்த்து என்று தூக்குக் கயிற்றை முத்தமிட்டானே அவன் அடைந்தது துன்பமா - இல்லை - இன்பம்! இன்பம்!!

இதோ அதற்கு அவனது புரட்சி மணம் வீசு பொறிகளின் எழுத்துக்கள்.

"உயிருள்ள பகத்சிங்கைவிட உயிரற்ற பகத்சிங் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன்.

நான் தூக்கிலிடப்பட்டபின்னர் என்னுடைய புரட்சிக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய அழகான தேசத்தின் சூழலெங்கும் பரவும்.

...இது என் உறுதியான நம்பிக்கை!"

பகத்சிங்கின் இன்பத்தின் உச்சி, அவனது கழுத்தினை தூக்கு கயிறு முத்தமிட்டபோது! ஆயிரம் காதலிகளின் முத்தங்கள்கூட அதற்கு இணையாகுமோ?  1938 இந்தி எதிர்ப்புப் போர்! கைதான தந்தை பெரியார்  அவர்களை மாதவ்ராவ் என்ற (பார்ப்பன) நீதிபதி விசாரிக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள், நீதிபதிக்கு முன்னே ஒரு அறிக்கை எழுதி வாசிக்கிறார்.

"ஏன் இந்த விசாரணை நாடகம்?  விரைந்து முடியுங்கள். உங்கள் எஜமானர்களான ஆட்சியாளருக்கு - எனக்கு எவ்வளவு அதிகபட்ச தண்டனை - குறைந்த வகுப்புள்ள கடுங்காவல் தந்தால் மகிழ்ச்சி  ஏற்படுமோ அதனை எனக்குத் தந்து இந்த  நாடகத்தை முடியுங்கள் என்று கனம் கோர்ட்டார் அவர்களை நான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்." என்றாரே!

என்னே துணிச்சல்! சிறைக்குப் போவதில்தான் எத்தனை இன்பத் தேடல்கள்!

எனவே இளைஞர்களே, தற்காலிக, மின்னல்களாகத் தோன்றி மறையும் இன்பங்களை நாடுவதில் உங்கள் கருத்தையும், உழைப்பையும் செலுத்துவதைவிட வாழ்வின் இலக்கு குறித்த சமூக நலம் சார்ந்தவைகளே இன்பம்!

இன்பம் உங்களுக்குள் இருந்து ஊற்றெடுக்கட்டும்; வெளியிலிருந்து திணிக்கப்படக் கூடாது, மறவாதீர்!

- விடுதலை நாளேடு, 25.5.18

வியாழன், 17 மே, 2018

பாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை!



பாமர மக்கள் எவ்வளவு எளிதில் மூடநம்பிக்கை களுக்கு ஆளாகி தங்களது வாழ்க்கையையே பலி கொடுத்துக் கொண்டுள்ளனர்.

நாட்டில் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகிறதே தவிர, அறிவியல் மனப்பாங்கு (scientific temper) மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிட எந்த முயற்சியும் செய்யாததோடு, பழைய கந்தல் புராணப் புளுகுகளுக்கெல்லாம் அறிவியல் முலாம் பூசிடவும் முயற்சிகளை இப்போதுள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் செய்து,  உலக விஞ்ஞானிகளையே அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்படுத்தி தலைகுனியச் செய்து வருவது இன்னும் மோசம்.

குதிரை, கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்ததை  போன்று உள்ளது இந்த பழமைக்கு பொருத்தமில்லாத மேல் பூச்சுப் பூசுவது!

நேற்றைய  'தின இதழ்' நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மனிதநேயம் உள்ள அனைவரது உள்ளங்களையும் நோகடிக்கும் செய்தி. அப்படியே தருகிறோம்.

"பாம்பு கடித்த பெண்ணின் உயிரைப் பறித்த மூடநம்பிக்கை!" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள முழுச் செய்தி:

"நாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு, முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் . ஓவர் நைட்டி ல்  ஒபாமா   ஆகிட  வேண்டும் என்று  நினைப்பவர்களை மனதில் வைத்துக் கொண்டு புரளிகளை கிளப்பி விட்டு சம்பாதிப்பதற்கென்றே சிலர் உலா வரு கிறார்கள். அவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மட்டுமல்ல, சற்று விழிப் புணர்வுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும். அவர்களை கண் மூடித்தனமாக நம்பினால் நீங்கள் உங்களுடைய உயிரைக்கூட பலிகொடுக்க நேரிட லாம். கோமியத்தில், மாட்டுச் சாணத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அதைக் குடித்தால் சர்வரோக நிவாரணியாக செயல்படும் என்ற பில்டப்புகளை நம்பி இங்கே ஒருவர் தன் மனைவியையே பறிகொடுத்திருக்கிறார்....

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ். என்பவருக்கு தேவேந்திரி என்ற மனைவியும் அய்ந்து குழந்தைகளும் இருக்கி றார்கள். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவ்வப்போது தேவேந்திரியும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து பொருளீட்டி வந்திருக்கிறார். விறகடுப்பினை தான் முகேஷ் வீட்டில் பயன்படுத்துவார்கள். அன்று முகேஷ் வேலைக்கு கிளம்பிட, அடுப்பெரிக்க விறகு வேண்டும் என்று சொல்லி. வீட்டிற்கு அருகில் இருந்த முள் காட்டிற்குள்   விறகு வெட்டி வர சென்றிருக்கிறார் தேவேந்திரி.

விறகினை வெட்டி  வெட்டி  கட்டி தலையில்  தூக்கி  வைக்கும் சமயத்தில் எங்கிருந்தோ வந்த கரும் பாம்பு ஒன்று தேவேந்திரியை கொத்தியிருக்கிறது. அதைப்  பார்த்து  பதறிப் போன  தேவேந்திரி விறகினை அங்கேயே  போட்டு  விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கிறார்.

முதலில் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு ஓடியவரை இடைமறித்த கணவர், எங்கே இப்படி அவசரமாக ஓடுகிறாய் என்று கேட்டிருக்கிறார், கதையைச் சொல்ல.... மருத்துவமனைக்குச் செல்ல லாம் என்றிருக்கிறார் மனைவி.

இல்லை. அதெல்லாம் வேலைக்கு ஆகாது, பாம்பின் விஷத்தை எடுக்க பாம்பாட்டி தான் சிறந்தவர். அதனால் நாம் உடனடியாக இப்போது செல்ல வேண்டியது மருத்துவரிடம் அல்ல, பாம்பாட்டியிடம் என்று சொல்லி அவ்வூரின் பாம்பாட் டியான முராரேவிடம் சென்றிருக்கிறார்கள். பாம்பு கடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் விஷம் பரவியிருக்குமே என்கிறார் முராரே...

இருவருக்கும் பயம்.... இப்போது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க, என் உயிரைக் காப்பாற்ற வழியே இல்லையா என்று கெஞ்சுகிறாள் தேவேந்திரி. சிறிது நேரம் யோசித்த பாம்பாட்டி முராரே... இருக்கிறது. இதற்கு ஒரே வழி தான் இருக்கு. இதைச் செய்தால் உடலில் கலந்திருக்கும் பாம்பின் மொத்த விஷத்தையும் எடுத்துவிடலாம் என்கிறார்.

இருவருக்குமே  மிகுந்த சந்தோஷம்.

இதன்  பிறகு அந்த விபரீதமான செயலில் இறங்குகிறார்கள். பாம்பாட்டி முராரேவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார் முகேஷ்.

அங்கே வாசலில் மனைவி படுத்துக் கொள்ள தொழுவத்தில் இருக்கிற மாட்டுச் சாணத்தை எடுத்து வந்து மனைவியின் உடல் முழுவதும் பூசி மூடுகிறார் முகேஷ்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்... என்னாச்சு? என்ன செய்கிறாய் நீ.... என்ன நடந்தது என்று ஆயிரம் கேள்விகள்... சிலருக்கு பதில் சொன்னார். சிறிது நேரத்தில் தேவேந்திரி உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தால்  மூடப்பட்டிருந்தது.

இப்போது அதன் அருகில் வந்து அமர்ந்த பாம்பாட்டி முராரே மந்திரங்களை சொல்ல ஆரம் பித்தார்.

சுமார் 75 நிமிடங்கள் மந்திரங்கள் சொல்லி விட்டு இப்போது இந்த சாணத்தை கலைத்துவிட்டுப் பார்.

உன் மனைவி துள்ளியெழுந்துவிடுவாள் என்று சிரித்திருக்கிறார் முராரே.

முகேஷும் அவசர அவசரமாக மனைவி உடல் மீது அப்பிய மாட்டுச் சாணத்தை எல்லாம் கலைத்துப் பார்த்திருக்கிறார்.

தட்டி எழுப்பியிருக்கிறார், தண்ணீர் தெளித் திருக்கிறார் ஆனால் தேவேந்திரி எழுந்திருக்கவே யில்லை. பிறகு தான் தெரிந்தது, மாட்டுச் சாணத்தை வைத்து மூடிய போதே மூச்சுத் திணறி தேவேந்திரி இறந்துவிட்டார்.

இந்த மருந்தை அரைத்துக் கொடுக்கிறோம், அதை குடிக்கச் சொல், இறுக்கமாக கயிரை முதலில் கட்டு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்... என்று நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் முகேஷ் கேட்கவேயில்லை என்கிறார்கள் அதை வேடிக்கை பார்த்த மக்கள். இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்கவேயில்லை, தேவேந்திரி பிழைத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது என்று எஸ்கேப் ஆகிவிட்டார் முராரே.

இப்போது தேவேந்திரியின் அய்ந்து குழந்தை களும் தாயை இழந்து அனாதைகளாகி விட்டார்கள்." என்பதுதான் அந்த செய்தி!

பாம்பின் விஷத்தைவிட, மூடநம்பிக்கையின் விஷம் எவ்வளவு ஆபத்தானது பார்த்தீர்களா? திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் தமிழ்நாட்டில் செய்து வரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு - ஒழிப்புப் பிரச்சாரம் எவ்வளவு தேவையானதொரு பிரச்சாரம் என்பதை இப்போதாவது எண்ணிப் பாருங்கள் - முடிந்தவரை மூடநம்பிக்கைகளின் முதுகுத் தோலை உரியுங்கள்!

'நாகராஜா' என்று பால் வார்க்கும் பக்த சிரோன் மணிகளும் இதைப் படித்து உய்த்து உண்மையை உணர்வார்களாக

- விடுதலை நாளேடு, 14.5.18

வெள்ளி, 11 மே, 2018

இதோ, நம்முள் உள்ள கடும் எதிரி!



மனித வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் தேவை - கடும் உழைப்பும், புத்திக் கூர்மையோடு கூடிய நுண்ணறிவு அணுகுமுறையாகும்!


நாம் நமது தவறுகளிலிருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல; நம்முடன் இருப்பவர்கள், நல்ல நண்பர்கள் அவர்களது தவறுகளும் கூட நமக்குச் சரியான  பாடங்கள் - எச்சரிக்கை மணிதான்!

வெறும் பாட திட்டங்களைப் புரட்டுவது மட்டும் 'கற்பதா'காது; உலகின் மனிதகுலச் செயல்களின் ஒவ்வொரு துகள்களும் நமக்கு நல்லாசான்களாக இருந்து, இப்படித் தவறு செய்தவர்கள் இறுதியில் எப்படி ஆனார்கள் பார்த்தீர்களா? என்று சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு களும் ஏராளம் உண்டே!

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது பிரபல புத்தகக் கடைகளில் தேடிப் பார்த்து வாங்கிய, ஒரு அற்புதமான அறிவுக் கருத்தை அழகாக நமக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு நூல்  Ryan Holiday என்ற நிர்வாகத்துறை நிபுணர் ஒருவர் எழுதிய 'Ego is the Enemy' என்ற புத்தகம்.

நோயாளிகள் டாக்டரிடம் சொல் லும்போது அவர் எழுதிக் கொடுக் கும் மருந்துச் சீட்டு (Prescription) போன்றதே 226 பக்கங்கள் கொண்ட அந்த வாழ்வியல் நூல் (ஆங்கி லத்தில்).

Humility - தன்னடக்கம் தான் இந்நூலில் அவர் தந்துள்ள மாமருந்து! இதனை கடைகளில் தேடி வாங்கவே முடியாது! செலவழிக்காமல் நம்முள் தேடினால், உணர்ந்தால் உடனே இமை மூடித் திறப்பதற்கு முன்னே மருந்து கிடைக்கக்கூடியது தான்  - அதற்கு நாம் மனம் வைத்தால் மட்டுமே கிட்டும்.

அடக்கம் என்றும் வாழ வைக்கும்; மனிதர்களை வளர வைக்கும்.



உரையாடலில்கூட மிகப் பலர், அவர்களது பெருமைகளையே தம்பட்டம் அடித்து, மற்றவர்களை வெறும் 'கேட்பாளர்களாக்கி' சலிப்புடன் உட்கார வைத்து விடும் காட்சி சர்வ சாதாரணம்தானே!


மேடைப் பேச்சுகளிலும் சரி, தனி உரையாடல்களிலும் சரி இந்த 'நான்' - இத்தகைய பேர்வழிகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி திக்குமுக்காடிடும் சொல்லாகவே அவர்களால் கையாளப்பட்டு அவர்களே அச்சிறைக் குள் தங்களை கைதிகளாக வைத்து பூட்டிக் கொள் கின்றனர்.

என்னே கொடுமை!, என்னே பரிதாபம்!

இந்த புத்தகத்தில் ரயான் ஹாலிடே அவர்கள் 'நம்முடைய ஆற்றல்கள், அறிவுடைமை எல்லாவற் றையும் தூக்கி விழுங்கிடும் அபாயம் மிக்க எதிரி, நம் வெற்றிக்கும்  தொடர் வளர்ச்சிக்கும் மிகப் பெரிய ஆபத்தான எதிரி இந்த 'தன்முனைப்பு' (EGO) தான்!' என்று குறிப்பிடுகிறார்.

இந்த மிருகம் நம்முள் அதிவேகமாக எழுந்து ஆட்டம் போடும்; பெரிய அறிவாளிகள், கல்வியாளர்கள், சாதனை சரித்திரத்திற்குச் சொந்தக்காரர்கள் எல்லோரை யும்விட வீழ்த்திடும் விபரீத மிருகம் ஆகும்; இது நம்முள் அடக்க முடியாமல் கட்டவிழ்த்து விடப்பட்டு விட்டால், நமது தோல்விகளும், நட்டங்களும், பின்னடைவுகளும் வரிசையாக வந்து நின்று நம்மைக் கொன்று குழி தோண்டிப் புதைத்து விடும்!

இயலாதவர்களாக இருந்தால்கூட தவறில்லை; இமய உச்சிக்கே சென்று விட்டதாகச் செருக்குக் கொள்ளும் தன் முனைப்பு என்ற உள் எதிரி எப்போதும் நம்மை அணுகாமல் ஓட ஓட விரட்டுங்கள்; பிறகு தானே நீங்கள் உயருவீர்கள்! உன்னதத்தின் ஊற்று என்றும் குறையாமல் நமக்கு வெற்றியைத் தந்து கொண்டே இருக்கும்!

இந்தப் புத்தகம் ஒரு மாமருந்து, படித்து முன்னேறுங்கள்!

-  விடுதலை நாளேடு, 11.5.18

அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்!



ஒரு வகுப்பறை - அதில் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்.

உலகின் ஏழு அதிசயங்கள் என்ன? எவை எவை?

மாணவர்களில் பலரும் உடனே பட்டியலிட்டு விடையளிக்கிறார்கள். விவாதமும் தொடங்கியது.

1.  எகிப்தின் 'பிரமிடு'கள்

2. தாஜ்மகால்

3. தி கிராண்ட்கேரியன்

4. பனாமா கால்வாய்

5. சீனப் பெருஞ்சுவர்

6. பாரிசில் உள்ள மாதா கோயில் (பாசிலிக்கா)

7. எம்பயர் ஸ்டேட் பில்டிங் (நியூயார்க்)

இப்படிப் பலரும் பதில் அளித்துப் பட்டியலிட்டனர்.

இதில் சில சில மாறுபட்ட கருத்துகளும் அங்கே இருந்தன.

ஒரே ஒரு மாணவி மட்டும் இத்தகைய பட்டியல் - 7 அதிசயங்கள் பற்றிய கலகலப்பு வாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இதை கவனித்த ஆசிரியர், அம் மாணவியிடம் வந்து, 'ஏனம்மா நீங்கள் மட்டும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது போல உள்ளீர்கள்' என்று கேட்டார்.

அமைதியாக அமர்ந்திருந்த அந்த மாணவி தனது மவுனத்தைக் கலைத்தார். 'அய்யா இவர்கள் தந்த உலகின் ஏழு  அதிசயங்கள் என்ற இந்தப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை'.

"எனது சிந்தனை ஓட்டம் வேறுவிதமாக உள்ளது!" என்றார்.

"அப்படியா உங்களுக்கு அதில் உடன்பாடில்லையா? பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா? அப்படியானால் அதனை இந்த வகுப்பில் தாராளமாகச் சொல்லலாம்; மாறுபட்ட கருத்தானாலும் பரிசீலிக்கலாம்; தாராளமாக அதை இந்த வகுப்பில் கூறலாமே" என்றார்!

"என்னைப் பொருத்தவரை ஏழு அதிசயங்களுக்காக உலகத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, தேடிட வேண்டாம்.

சரியாக யோசித்தால் நம் ஒவ்வொரு மனிதருள்ளும் அந்த ஏழு அதிசயங்கள் நிலை கொண்டுதான் இருக்கின்றன! எடுத்துக்காட்டாக, -

1. தொடுதல் (to touch)

2. சுவைத்தல் (to taste)

3. பார்த்தல் (to see)

4. கேட்டல் (to hear)

5. உணர்தல் (to feel)

6. சிரித்தல் (to laugh)

7. நேசித்தல் (to love)

இவைகள் எல்லாம் மனிதர்களுக்கு அவர்களிடமே உள்ள ஏழு அதிசயங்கள்தான்!

தொலை தூர நாடுகளுக்கும், நகரங்களுக்கும் நாம் அலைந்து திரிந்து, பறந்து ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்!

எதுவுமே அருகில் இருந்து எளிதில் கிடைத்தால், அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு மகிழாமல் புறந்தள்ளி விடுகிறோம்.

எனவே வேகமாக ஓடாதீர்கள், மெல்ல நடங்கள் - நின்று யோசித்து, உணர்ந்து, கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து, சிரித்து மகிழ்ந்து, அன்பும், நேசமும் அனைவரிடமும் காட்டுங்கள்"

என்னே தெளிவான, துணிவான பதில்!

அருகில் இருப்பதால் எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

எளிதில் கிடைப்பதால் அரிதானதல்ல என்று எண்ணாதீர்கள்!

எளிமையாக இருப்பவர்களை ஏளனப் பார்வையால் கொன்று விடாதீர்கள்!

கள்ளங்கபடமற்ற சிரிப்பால் நோயை விரட்டுங்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை "அதிசயங் களையும்" உங்களுக்குள்ளேயே வைத்து தனிமைப் படுத்தி  விடாமல், ஊர் நலம், உலக நலம் ஓம்பப் பயன்படுத்தி அறத்தால் வரும் இன்பத்தை அள்ளிப் பருகுங்கள்; தள்ளிப் போடாதீர்!

(இணையத்தில் வந்த ஒரு துணுக்கை வைத்து எழுதப்பட்டது).

-   விடுதலை நாளேடு, 10.5.18

அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்!



ஒரு வகுப்பறை - அதில் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்.

உலகின் ஏழு அதிசயங்கள் என்ன? எவை எவை?

மாணவர்களில் பலரும் உடனே பட்டியலிட்டு விடையளிக்கிறார்கள். விவாதமும் தொடங்கியது.

1.  எகிப்தின் 'பிரமிடு'கள்

2. தாஜ்மகால்

3. தி கிராண்ட்கேரியன்

4. பனாமா கால்வாய்

5. சீனப் பெருஞ்சுவர்

6. பாரிசில் உள்ள மாதா கோயில் (பாசிலிக்கா)

7. எம்பயர் ஸ்டேட் பில்டிங் (நியூயார்க்)

இப்படிப் பலரும் பதில் அளித்துப் பட்டியலிட்டனர்.

இதில் சில சில மாறுபட்ட கருத்துகளும் அங்கே இருந்தன.

ஒரே ஒரு மாணவி மட்டும் இத்தகைய பட்டியல் - 7 அதிசயங்கள் பற்றிய கலகலப்பு வாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இதை கவனித்த ஆசிரியர், அம் மாணவியிடம் வந்து, 'ஏனம்மா நீங்கள் மட்டும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது போல உள்ளீர்கள்' என்று கேட்டார்.

அமைதியாக அமர்ந்திருந்த அந்த மாணவி தனது மவுனத்தைக் கலைத்தார். 'அய்யா இவர்கள் தந்த உலகின் ஏழு  அதிசயங்கள் என்ற இந்தப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை'.

"எனது சிந்தனை ஓட்டம் வேறுவிதமாக உள்ளது!" என்றார்.

"அப்படியா உங்களுக்கு அதில் உடன்பாடில்லையா? பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா? அப்படியானால் அதனை இந்த வகுப்பில் தாராளமாகச் சொல்லலாம்; மாறுபட்ட கருத்தானாலும் பரிசீலிக்கலாம்; தாராளமாக அதை இந்த வகுப்பில் கூறலாமே" என்றார்!

"என்னைப் பொருத்தவரை ஏழு அதிசயங்களுக்காக உலகத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, தேடிட வேண்டாம்.

சரியாக யோசித்தால் நம் ஒவ்வொரு மனிதருள்ளும் அந்த ஏழு அதிசயங்கள் நிலை கொண்டுதான் இருக்கின்றன! எடுத்துக்காட்டாக, -

1. தொடுதல் (to touch)

2. சுவைத்தல் (to taste)

3. பார்த்தல் (to see)

4. கேட்டல் (to hear)

5. உணர்தல் (to feel)

6. சிரித்தல் (to laugh)

7. நேசித்தல் (to love)

இவைகள் எல்லாம் மனிதர்களுக்கு அவர்களிடமே உள்ள ஏழு அதிசயங்கள்தான்!

தொலை தூர நாடுகளுக்கும், நகரங்களுக்கும் நாம் அலைந்து திரிந்து, பறந்து ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்!

எதுவுமே அருகில் இருந்து எளிதில் கிடைத்தால், அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு மகிழாமல் புறந்தள்ளி விடுகிறோம்.

எனவே வேகமாக ஓடாதீர்கள், மெல்ல நடங்கள் - நின்று யோசித்து, உணர்ந்து, கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து, சிரித்து மகிழ்ந்து, அன்பும், நேசமும் அனைவரிடமும் காட்டுங்கள்"

என்னே தெளிவான, துணிவான பதில்!

அருகில் இருப்பதால் எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

எளிதில் கிடைப்பதால் அரிதானதல்ல என்று எண்ணாதீர்கள்!

எளிமையாக இருப்பவர்களை ஏளனப் பார்வையால் கொன்று விடாதீர்கள்!

கள்ளங்கபடமற்ற சிரிப்பால் நோயை விரட்டுங்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை "அதிசயங் களையும்" உங்களுக்குள்ளேயே வைத்து தனிமைப் படுத்தி  விடாமல், ஊர் நலம், உலக நலம் ஓம்பப் பயன்படுத்தி அறத்தால் வரும் இன்பத்தை அள்ளிப் பருகுங்கள்; தள்ளிப் போடாதீர்!

(இணையத்தில் வந்த ஒரு துணுக்கை வைத்து எழுதப்பட்டது).

-   விடுதலை நாளேடு, 10.5.18