பக்கங்கள்

திங்கள், 2 செப்டம்பர், 2019

இதோ ஒரு மறதி நோய்க்கு மாமருந்து!

கி.வீரமணி
முதுமையில், வயதானவர்கள் பாதிக்கப் படுவது பெரிதும் ஒரு வகை மறதி நோயால்தான்! அதில் இரண்டு அல்லது மூன்று வகை உண்டு என்று மருத்துவர்களும், மருத்துவ ஆய்வாளர் களும் விளக்குகிறார்கள்.
Dementia என்ற மறதி நோய்பற்றி பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு ஏடான  'PLOS  Medicine' என்ற ஏட்டில், சில அரிய தகவல்கள், ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்டுள்ளன.
பிரிட்டனில் யாரெல்லாம் தங்களது முதுமை தொடங்கும் 50 முதல் 60 வயதுள்ள கால கட்டத்தில்  வெறும் தனிமையில், அதிகம் பிற ருடன் கலகலப்பாக நண்பர்களோடு இணைந்து பழகாமல் இருக்கிறார்களோ, அவர்களை இந்த மறதி நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு என்று கண்டறிந்து கூறுகின்றனர்!
இதுபற்றி 35 வயதுள்ள வாலிபர்கள் தொடங்கி 55 வயதுள்ள இளம் முதியவர்கள் ஆகியவர்களில் 10, 228 பேர்களை கடந்த 28 ஆண்டு காலம் தொடர்ந்து ஆய்வு செய்து - அவர்களது உடல் நலம் - மனநலம் பற்றி ஆய்வு செய்துள்ளனர். அதன் முடிவு அடிப்படையில்  சமூக உறவுகளோடு, நல்ல நட்புறவு வட்டத்தை - தங்கள் ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்ட - கொண்ட நண்பர்களுடன் கலகலப்புடன் பழகி வாழ்ந்து வந்தால் நிச்சயம் அவர்களுக்கு மறதி நோய் மட்டும் வராது - ஏன் மாரடைப்பு போன்ற நோய்களும்கூட வர வாய்ப்புக் குறைவு.
மன அழுத்தம் இல்லாமல் மனம் விட்டுப் பேசி, எப்போதும் கலகலப்புடன் வாழும் முதியோர்களுக்கு ரத்த அழுத்தம் கூட  (B.P.) ஏற்படும் வாய்ப்புக் குறைவுதானே!
மேலே காட்டியுள்ள 10 ஆயிரத்திற்கு மேற் பட்ட நண்பர்களின் 28 ஆண்டு கால தொடர் வாழ்க்கை எப்படி அமைந்தது; மகிழ்ச்சியும் கலகலப்பும் அவர்களை எப்போதும் உற்சாக மாக வைத்திருக்கிறது. ஓய்வு, முதுமை என்ற பெயரில் தனிமைச் சிறையில் தங்களை அடைத்து, வாழ்வைக் குறைத்துக் கொள்ளுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.
தங்களுடைய நெருங்கிய நண்பர்களைத் தினமும் சந்தித்து உரையாடி மகிழும் பழக்கமும் வழக்கும் வைத்துள்ளவர்களாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அத்தகையவர்களுக்கு 12 சதவிகிதம் பேர் களுக்கு மறதி நோய் தாக்குதல் எளிதில் நெருங்குவதில்லை என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்!
எனவே 'உம்முணாமூஞ்சிகளாக' எதற் கெடுத்தாலும் எரிந்து விழுந்து மற்றவர்கள் நெருங்கவே, பழகவே, அஞ்சி அஞ்சி, ஓடிப் போகும் நபர்களாக இல்லாமல் அன்பும், நட்பும், நகைச் சுவை உணர்வுடன் வாழ்ந்து பழகிட முயற்சியுங்கள்.
இதைவிட மகத்தான மாமருந்து மறதி நோய்க்கு வேறு இல்லை. இதை மறவாதீர்!
- விடுதலை நாளேடு, 2.9.19

சனி, 31 ஆகஸ்ட், 2019

மிக ஆபத்தான போதை மருந்து - புகழ்!

கி.வீரமணி
போதைப் பொருள்களை அரசு தடை செய்துள்ள போதும், இன்னமும் போதை தரும் பொருள்களான கஞ்சா, குட்கா, அபின் போன்றவைகளை விற்றுக் கொண்டும், லாபமடைந்து கொண்டும்தான் இருக் கிறார்கள்!
'சட்டத்தின் கைகள் நீளம்; சட்டத்தை மீறும் கைகள் அதைவிட நீளம்' என்கிறது ஆங்கிலப் பழமொழி ஒன்று!
பன்னாட்டுப் போதைப் பொருள் கடத்தல், பெரிய கார்ப்பரேட்டுகளையெல்லாம் மிஞ்சிடும் பெரும் கொள்ளைக் கூட்டமாகும். 'மாஃபியா' (Mafia)  என்றும் கூறுவார்கள்!
இளைஞர்கள் - பள்ளி மாணவர்களிடையே 'குட்கா' போன்றவை, 'பான்பராக்' போன்றவைகளை விற்பதற்குத் தடை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய திராவிடர் கழக, இளைஞரணி, மாணவர் கழக மாநாடுகளில் எல்லாம் பல தீர்மானங்கள் இயற்றி கிளர்ச்சிகளையும் கூடச் செய்யத் தவறியதில்லை!
இந்தப் போதை மருந்து அதனை எடுப்பவர்களை 'மிதக்கச் செய்தல்', மயங்கிக் கிடக்கச் செய்தல் போன்ற விளைவுகளை உருவாக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதானே!
ஆனால் இந்தப் போதைப் பொருள்களை விட மிகவும் ஆபத்தான போதைப் பொருள் எது தெரியுமா தோழர்களே?
அதுதான் புகழ் போதை!
இந்தப் போதை மிகச் சிறந்த ஆளுமையுள்ள வர்களை, ஆற்றல்மிகு தலைவர்களை எல்லாம் பிடித்துக் கொண்டால் எளிதில் அதிலிருந்து அவர்கள் வர முடியாத "வாழ்நாள் சிறைக் கைதியாக" தங்களைத் தாங்களே அடைத்துக் கொள் கிறார்கள்!
வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், அப்போதைப் பொருள் கிட்டாவிட்டால் எந்த கீழிறக்கத்தையும்கூட சந்திக்க வேண்டிய அவலத்தைச் சந்திக்க அவர்கள் முன்பின் யோசிப்பதே இல்லை.
போதை ஏறியவனுக்கு எப்படி சரியாகப் பாதை தெரியாதோ அதே போன்ற நிலைதான் இதுவும்!
ஆசை வெட்கமறியாது; புகழ் போதையோ "இழத்தொறும் காதலிக்கும் சூது" போன்றது. மீண்டும் மீண்டும் தேடி, நாடி, ஒடிச் செல்லத் தூண்டிக் கொண்டே இருக்கும்!
மற்றவரைப் பாராட்டக் கூடாது என்பதல்ல இதன் பொருள் - தத்துவம்.
"பாராட்டும், பெருமையும் நம்மை வந்து அழுத்தும் போதுஅதைப் பாரமாகத் தூக்கிச் சுமக்கக் கூடாது; மாறாக பறப்பதற்கான இறக்கைகளாக - சிறகுகளாக ஆக்கிக் கொண்டு தொடர்ந்து பறந்து கொண்டே இலக்குக்கு செல்லவே முயற்சிக்க வேண்டும்" என்றார் புத்தர் - அது நல்ல பாடம்.
படகுசவாரிக்குக் கிடைத்த பாதுகாப்பான கூடுதல் துடுப்புகள் மேலும் தயார்நிலை துடுப்புகள் என்றே கருதி அதை வைத்திருக்க வேண்டும். மேலும் தலையில் சுமந்து வெளியே காட்டிப் பெருமைப்பட வேண்டும் என்றால் பாரத்தினால் படகேகூட கவிழவும் கூடுமே!
கடமையைச் செய்ய இது ஒரு தூண்டுகோல் அவ்வளவுதான்! அடக்கத்தின் பயன் அப்போது தான் அதிகம் உணரப்பட வேண்டும்;  காட்டவும் வேண்டும்!
வேட்டையாடியும் புகழ் வரக் கூடாது, தேட்டை போட்டும் திருடப்பட்டச் சொத்தாக 'புகழ்' குவிக்கப் படக் கூடாது!
"மூட்டை தூக்கும்போது நான் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் துயரப்பட்டதில்லை" என்றார் தத்துவஞானி தந்தை பெரியார் அவர்கள்!
கடலில் குளித்து மகிழச் செல்லும் பல இளை ஞர்களை அலைகள் அடித்துச் சென்று உயிர் பறித்துவிடும் சோகச் செய்திகள் நம்மை வருத்து கின்றனவல்லவா?
அதுபோல 'புகழ்', கடல் போல் பொங்கி வந் தாலும், தற்பெருமை, தானடித்த மூப்பு, தலைக்கனம் - பாரம் என்ற அலைகளால் அடித்துச் செல்லப் படாமல் கரையேறி கடமையாற்ற கண்ணுங் கருத்துமாய் இருங்கள்!
அளவற்ற புகழ் தேடி அலையாதீர்கள்!
அவதிகளை விலை கொடுக்காமலே பெறாதீர்!!
- விடுதலை நாளேடு,31.8.19

சனி, 24 ஆகஸ்ட், 2019

'கோபம் - அளவோடு' நியாயமே!



கி.வீரமணி


கோபங்கள் பலவகை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி வகை, தனி ரகம்!

அய்ந்தறிவு படைத்த மிருகங்களுக்குக்கூட கோபம் வராமலா இருக்கிறது?

பிறகு எப்படி ஆறறிவு படைத்த, மானம் உள்ள மனிதர்களுக்குக் கோபம் வராமலிருக்க முடியும்?

யாரையாவது பார்த்து 'இவருக்குக் கோபமே வராதுங்க' என்றால் அது மனித சுபாவத்திற்கு மாறானவர் என்று அறிமுகப்படுத்துவது போன்றது.

மனித இயல்பு கோபப்படுவதுதான். எப்படி நகைச்சுவை வரும்போது சிரிக்கின்றோமோ, துக்கம் துயரம் துளைக்கும்போது அழுகி றோமோ, அதுபோன்றது தான் கோபம் கொள் ளும் உணர்ச்சியும்கூட!

கோபப்படாதவர்கள்போல் சிலர் காட்டிக் கொண்டால் அது நடிப்பு, அல்லது நயவஞ்சகம்; எதையோ மற்றவர்களிடம் எதிர்பார்த்து பொறுத்துக் கொள்ளுகிறார் என்பதே அதன் புதை பொருள்.

Provoked Anger என்பது ஆத்திரமூட்ட பட்டதால் ஏற்படும் கோபம், பல நேரங்களில் நியாயப்படுத்தக்கூடிய கோபம் தான்!

ஆனால் காரணமின்றி எதற்கெடுத்தாலும் அற்ப விடயங்களுக்கெல்லாம் கூடத் தேவையற்றவைகளுக்காக கோபப்படுவது, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பு - பழக்கம் ஆகும்!

ஆத்திரமூட்டப்பட்ட கோபத்தினைக் கட்டுப்படுத்துவதை விட வெடித்து வெளிப் படுத்தி விடுவதே - அது நாகரிகமான அளவில், ஓர் எல்லைக் கோட்டுடன் நிறுத்திக் கொள் வதற்குப் பழகவேண்டும்.

ஆத்திரமூட்டப்படும் கோபத்தைவிட ஆத்திரமூட்டப் படாமல் அவ்வப்போது வெடிக்கும் கோபம் நமது இதயத்தின் - இரத்த ஓட்டத்தின் - அதன் காரணமாக நமது உடல் நலத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்!

உடல் நலம் பேணுவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய நல்ல அறிவுரை!

முற்றும் துறந்தவர்களுக்கே கோபம் "சாபம்" எல்லாம் புராணங்களில் வராமலிருக்கிறதா?

முனிவர் என்ற பெயரேகூட கோபம் கொள்பவர் - முனிவு என்பதன் அடிப்படையால் தானே? மொழி வல்லுநர்கள் தீர்ப்புக் கூறட்டும்!

தனி வாழ்க்கையில் கோபப்படுவோர் கூட பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது கட்டாயம் கோபத்தை அடக்கியே ஆகவேண்டும் - பொது நலம் கருதி.

எனக்கே கூட இந்த கெட்டப்பழக்கம் வரும்; ஆனால் மின்னல் போல் உடனே மறைந்து விடும்.

உடனடியாக நான் நடந்து கொண்டது சரிதானா? என்ற கேள்வியையும் உள்மனம் கேட்டு ஒரு 'குட்டும்' வைக்கும்!

எனது வாழ்விணையர் என்னை இவ்வகை யில் பற்பல நேரங்களில் கண்டித்து நெறிப் படுத்துவார்; அப்படி இடித்துரைக்கும் நட்பு அனைவருக்குமே தேவை!

நியாயமான கோபம் மற்ற சக தோழர் களையோ, ஊழியர் களையோ, தவறு செய்வதிலிருந்து திருந்தாதவர்களையோ திருத்த தேவையானதுதான் என்பதையும் முழுமையாக மறுத்துவிட முடியாது!

இளமையில், மாணவப் பருவத்தில் பெற் றோரின் குறிப்பாக தந்தையின் கண்டிப்பு, படிக் கும்போது ஆசிரியர்களின் அந்தக் காலத்துப் பிரம்படி (இக்காலத்தில்தான் அது முடியாத ஒன்றாயிற்றே) நம்மை மிகவும் நல்வழிப்படுத்தும் வழிமுறைகளாகவே அமைந்ததை, பிற்காலத் தில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எண்ணி எண்ணி மகிழத்தானே செய்கிறோம்!

ஆனால் எந்தக் கோபத்தையும் நீடிக்கவிடக் கூடாது; நிலைத்து விட்டால் அது வன்மமாகி விடும். பழிக்குப் பழி என்ற மிருக உணர்ச்சிக்கு மனிதர்கள் ஆளாகி, கூலிப்படையைத் தேடு கிறார்கள், தன் ரத்த உறவுகளை, கொள்கை உறவுகளையே கூட பலிகடாவாக்கி பிறகு தண்ட னைக்காளாகி அழுவதன் பலன்தான் என்ன?

எனவே கோபப்படுதலும் சிற்சில நேரங்களில் தேவைதான் - ஆனால் அது எல்லைதாண்டி விடாமல் - நயத்தக்க நாகரிகத்தில் நின்று விடுவது நல்லது - நம் இதயத்திற்கும் நட்பிற்கும்! இல்லையா?

- விடுதலை நாளேடு, 24. 8. 19

சனி, 17 ஆகஸ்ட், 2019

மெலின்டா கேட்ஸ் தரும் விருந்து!



மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள 'மஞ்சுள் வெளியீட்டகம்' (Manjul Publishing House Private Ltd.)  மிக அருமையாக அண்மைக் காலத்தில் வெளி வந்து உலகம் முழுவதும் பரவலாகப் படிக்கப் படுகின்ற அரிய ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் அரிய 'அறிவுத் திருப்பணியை' மேற்கொண்டு வருகிறது.
எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு வாய்ப்பாக மும்பையில் வாழும் திருமதி. நாகலட்சுமி சண்முகம் - நல்ல தமிழில் மொழியாக்கம் செய்யும் ஆற்றலாளர், அவர்களுக்குக் கிடைத்துள்ளது ஒரு அரிய நல்வாய்ப்பாகும்.
மும்பைக்கு முன்பு சென்றபோது அந்த சிறந்த மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர் என்னை வந்து சந்தித்தார்;  'தமிழ் லெமுரியா'வின் ஆசிரியர் - திராவிட இயல் கருத்தாளர் - பகுத்தறிவாளர் தோழர் குமணராசன் இந்த சந்திப்பினை ஏற்படுத்தினார். தோழர் ரவிச் சந்திரன், கணேசன் போன்ற கழகக் குடும்பத்தினரும் இருந்தனர்!
உலகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் தரும் அரும் பணியை திருமதி. நாகலட்சுமி சண்முகம் ஆற்றி வருகிறார். அயராமல் உழைக்கும் தளராதத் தமிழ்த் தொண்டு - சிறப்புக்குரியது அவரும், அவருக்குப் பெரும் ஊக்கத் தூண்டுதலாக உள்ள அவரது வாழ்விணையரும் தமிழ் கூறும் நல்லுலகத்தின்  பாராட்டுதலுக்குரியவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டு நாடகத் தமிழ்ப் பணியில் முத்திரை பதித்த - அக்காலத்து 'முத்தமிழ் கலா வித்துவ ரத்தினங்கள்' என்ற பட்டத்தோடு உலா வந்த டி.கே. சண்முகம் ("அவ்வை சண்முகம்") சகோதரர்களின் குடும்பத் தினர் சேர்ந்த உறவுக்காரர் திருமதி. நாகலட்சுமி சண்முகம்.
மஞ்சுள் பதிப்பகம் அவ்வப்போது வெளியிடும் தமிழ் மொழியாக்க அரிய நூல்களை அனுப்பு கின்றனர், படிக்கின்றோம். மதிப்புரையும் அளிப்ப தோடு, புத்தக நண்பர்களுடன் நூற்களின் சிறப்புப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுகின்றோம்.
அதன் தமிழ்ப் பிரிவு ஆசிரியர் திரு. பி.எஸ்.வி. குமாரசாமி அவர்களின் இந்த சீரிய தமிழ்த் தொண்டும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
தந்தை பெரியார் அவர்கள் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்துப் பேசி, எழுதி, போராடிய துறையில் முக்கியமானது பெண்ணடிமை ஒழிப்பு - பெண்களின் சமத்துவமும், பெண்களுக்கு அதிகார வாய்ப்புக்களைத் தந்து சமுகம் பயனடைதலும் ஆகும். அவர் 1925ஆம் ஆண்டின் இறுதியில் துவக்கிய சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியங்களில் ஒன்று இது!
இக்கருத்துபற்றி, பிரபல கணினி மென் பொருள் உற்பத்தி நிறுவனமான உலகப் புகழ் பெற்ற மைக்ரோ சாஃப்ட்  (Microsoft) நிறுவனர் - பில்கேட்ஸின் வாழ்விணையர் திருமதி. மெலின்டா கேட்ஸ் (Melinda Gates)  எழுதியுள்ள "The Moment of Life: How Empowering Women Changes the World" என்ற அருமையான ஆங்கில நூலை  திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள் -
"பெண்களை உயர்த்துவோம்!
சமுதாயத்தை உயர்த்துவோம்!"
என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழாக்கம் செய்து தந்துள்ளார்!
'நவில்தொறும் நூல் நயம்' என்ற வள்ளுவர் கூறும் நூல் வரிசை இது!
அதில் அந்நூலாசிரியர் மெலின்டா கேட்ஸ் கூறுகிறார்:
"என்னுடைய இருபதாண்டுகால சமுகப் பணியின் ஊடாக நான் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்; நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்தவிரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்!"
குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மை வரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா  கேட்ஸ் கொடுத்துள்ள அரிய தகவல்களையும், அதிர்ச்சியூட்டக் கூடிய உண்மைகளையும் அலசி ஆராய்ந்து சிந்தனை விருந்தளிக்கிறார்!
- விடுதலை நாளேடு, 17. 8 .19

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

என்றும் வாழும் புரட்சி இலக்கிய மேதை ராகுல் சாங்கிருத்யாயன்

கி.வீரமணி
நேற்று (14.8.2019) என்னை சந்தித்த அருமை ஆய்வாளர் தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், ஓர் அற்புதமான நூலை - 'நவில் தொறும் நூல் நயம்' மிக்க ஒரு நூலை அன்பளிப்பாகத் தந்தார். ஏற்கெனவே பலமுறை நான் தேடிக் கொண்டிருந்த நூல் அது.
1893-19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கே உத்தரப்பிர தேசத்தின் ஆசாம்கார் மாவட்டத் தில் பாந்தகா என்னும் பாட்டன்மார் கிராமத்தில் பிறந்த கேதார் நாத் பாண்டே - பிறகு ராகுல் சாங்கிருத் யாயன் என்று பன்மொழிப் புலவராகி, சுதந்தரப் போராட்ட வீரராகி, பவுத்தராகி, மார்க்சிஸ்ட் சிந்தனை யாளராகி மறைந்தும் மறையாமல் வாழும் ராகுல் சாங்கிருத்யாயன் என்று உலகம் அறிந்த இந்த இலக்கிய முற்போக்குச் சிந்தனையாளரின் வாழ்க்கை வரலாற்று நூல் பிரபாகர் மாச்வே என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, அதை, எளிய, இனிய தமிழில் தமிழ்நாட்டின் தலைசிறந்த புரட்சி எழுத் தாளரான தோழர் வல்லிக்கண்ணன் அவர்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
இதன் முதல் பதிப்பு 1986இல் வெளிவந்தது. பிறகு கிடைக்கவில்லை. இப்போது சாகித்திய அகாதமி இதை இரண்டாம் பதிப்பாக 2019இல் வெளி யிட்டுள்ளது.
ராகுல் சாங்கிருத்யாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலைப் படித்தால் - மனிதகுல வளர்ச்சியின் வரலாறு காந்தி சகாப்தம் வரைகூட தெரிந்துகொள்ள அது பெரிதும் உதவும்.
பலமொழிகளில் (ஆங்கிலம் உட்பட)  வெளி வந்துள்ளது. எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாது - நவில்தொறும் இன்பம் தரும் இனிய சமுக வரலாற்று மனிதகுல வளர்ச்சிஆவணம் அது!
35 மொழிகள் கற்றுத் துறை போகிய நல்லறிஞர் - கடைசி காலத்தில் முதுமையால் நினைவு இழப்பு - ஞாபக மறதி நோயால் ஓராண்டுக்கு மேல் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து உயிர் நீத்த, புதுமை இலக்கிய சிற்பி இவர்!
அவரது ஆராய்ச்சி நுழையாத துறையே இல்லை எனலாம்! சோவியத் ரஷ்யாவில் பல ஆண்டு காலம் இருந்து , மணம் புரிந்து, குழந்தையும் பெற்ற குடும்பத் தினராக இருந்தவர்.
இவரது வாழ்க்கை வரலாறு 'மேனி ஜீவன்' அல்லது 'மேரி ஜீவன்'  என (இரண்டு இடங்கள் இப்படி வேறுபட்ட சொற்கள் உள்ள இந்நூலில்) இரண்டு பாகங்களாகி வந்துள்ளன!
இவரது 'ஊர் சுற்றி புராணம்' நூலை எனக்கு திராவிடர் கழக மகளிரணித் தோழர் பார்வதி கணேசன் வாங்கி வந்து தந்தார் - சில ஆண்டுகளுக்கு முன்பு!
பல மதங்கள் பற்றிய ஆய்வுகளும் அவர் எழுதியவற்றுள் அடங்கும்!
1963ல் டார்ஜிலிங்கில் உயிர் துறந்து அவர் எரியூட்டப் பட்டவிடத்தில் ஒரு சிறு நினைவுச் சின்னம் உள்ளது.
அவரது அழியாப் புகழ் பெற்ற நூற்களை விடவா வேறு நினைவுச்சின்னம் 'ராகுல் ஜி' என்று அழைக்கப்பட்ட அந்த  ஈடு இணையற்ற இலக்கிய மேதைக்குத் தேவை?
ராகுல் சாங்கிருத்யாயன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் இப்படி இந்நூலில் சுருக்கமாக, அழகாகத் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன!
வாங்கி, படித்துப் பயன் பெறுங்கள்.
அந்நூலின் ஒரு பகுதி இதோ!
"அவர் தனது ஓய்வு நேரத்தைப் பெரும்பாலும் எழுதுவதிலும், படிப்பதிலும் ஈடுபடுத்தினார். எழுத்தில் அவர் வேகமும் கோபமும் காட்டியபோதிலும், தனிப்பட்ட முறையில் மென்மையாகவும், வார்த்தைகளை நிதானமாகவும் பேசுகிறவராகவே இருந்தார். அவர் பெரிய மேடைப் பேச்சாளர் அல்லர். முப்பத்துநான்கு, அல்லது அதற்கும் அதிகமான மொழிகளை அறிந்திருந்த போதிலும், அவர் அநேகமாக சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தான் எழுதவும் பேசவும் பயன்படுத்தினார். பேச்சிலும் புத்தகங் களிலும் அவர் உபயோகித்த மொழி மிக எளியதாக இருந்தது. அவர் எப்போதும் சாதாரண வாசகனை தன் நினைவில் கொண்டிருந்தார். சில சமயம் அவர் எழுத்தில் ஒரு தீவிர உற்சாகியின் அல்லது ஒரு மதப்பிரசாரகனின் ஒருபக்கச் சார்பு காணப்படும்; ஆனால் அவருக்குக் கொள்கைவெறி என்பது இருந்ததில்லை. மிகத் தாழ்ந்த நிலைகளிலிருந்து மேனிலை அடைந்த ஒருவருக்கு, பெரும்பாலும் தானாகவே கற்றுத் தேர்ந்தவருக்கு, இத்தகைய முற்போக்கான, பகுத்தறிவுரீதியான, மதச்சார்பற்ற, மனிதாபிமான நிலையைப் பெறுவதும், போற்றி வளர்ப்பது என்பதும் உண்மையிலேயே விசேஷ மான ஒரு சாதனைதான். மறைபொருள் வாதிகள், மாயாவாதிகள், போலி ஆன்மீகவாதிகள் சம்பந்த மான குறிப்புகளில் அங்கும் இங்குமாக அவர் கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருக் கிறாரே தவிர, ராகுல் எவரையும் வெறுப்பவர் இல்லை . விஷயங்களின் மறுபக்கத்தைப் பார்க்கவும், ஒவ்வொன்றிலும் ஏதாவது நல்லதைக் கண்டு பிடிக்கவும், விழுங்கமுடியாததாகவும் விநோக மானதாகவும் தோன்றியதைக்கூடப் புரிந்து கொள் ளவும் அவர் முயன்றார். புத்தரின் கொள்கையான கருணையைக் கற்றுத் தேர்ந்ததின் விளை வாகப்பிறந்த அனுதாப உணர்வு உள்ளார்ந்து இருப்பதனால், அவருடைய வாழ்வும் இலக்கியமும் வாசகரிடம் ஒரு ஆழ்ந்த, நிலையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தின் கலப்பான நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள ராகுல் முயன்றார். இச்செயல் முறையில், சமநிலையும், ஒருங்கிணைப்பும் கொண்ட ஒரு புதிய சுய மனிதனைத் தேடினார்."


இப்படிப்பட்டவரின் இத்தகைய கருத்துக் கருவூலகங்களைப் படித்துப் பயன் பெற்று, பகுத்தறிவாளர்களாகுங்கள், இளைஞர்களே! தோழர்களே!!
- விடுதலை நாளேடு, 15.8.19

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா!

கி.வீரமணி,
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஊழியரான திருவாளர் சண்முகவேல் (வயது 72) அவர் களை பின்புறமாக வந்து கழுத்தில் கயிற்றைப் போட்டு கொலை செய்து, வீட்டில் கொள்ளை யடிக்க முயன்ற சம்பவம் நடந்து கொண்டு வரும்போது, உள்ளே இருந்து கூச்சல் கேட்டு ஓடோடி வந்த அவரது வாழ்விணையர் திருமதி செந்தாமரை (வயது 65) கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் எடுத்து தைரியமாக வீசி, அந்த இரு முகமூடிக் கொள்ளையர்களை - அவர்கள் கையில் அரிவாள் இருந்ததையும் பற்றிக் கவலைப் படாமல், துணிச்சலுடன் பொருளை வீசி விரட்டி அடித்து இருவரும் இணைந்து அந்த  முகமூடிக் கொள்ளையர்களை ஓடச் செய்த தீரமிக்க செயல், தொலைக்காட்சி ஊடகங் களில், காணொலியாகக் கண்டபோது தமிழ் மண் வீரத்தின் விளைநிலம், விவேகத்தின் ஊற்று என்பதை எண்ணி, எண்ணி பூரித்து மகிழ்கிறோம்! உலகமே வியக்கிறது!
72 வயது முதியவர் - ஒரு இளைஞரைப் போல் போராடியதைவிட, அவரது 65 வயது ஆன துணைவியார் திருமதி செந்தாமரையின் தீரத்தையும், சமயோசிதச் செயலையும், கையில் கிடைத்த ஆயுதத்தோடு போராடிய தும் அந்த 'கொள்ளை வினைக்கு' வந்த இரண்டு திருடர்களும் தங்கள் அரிவாளைப் போட்டு ஓடும் காட்சியும் வெறும் படம் அல்ல நண்பர்களே, பாடம்!
வீரம் கொப்பளித்த விவேக செயல்! தந்தை பெரியார் சொல்வார்; "பெண்களை நாம் 'மென்மையானவர்கள்' என்று அடக்கி வீட்டுக்குள்ளே பூட்டி வைத்தோம்; பொத்திப் பொத்தி வளர்த்துப் பயந்தாங்கொள்ளிகளாக்கி னோம். அதனால் போராட வேண்டிய நேரத் தில் போராடும் குணத்தை நமது பெண்கள் இழந்துள்ளார்கள்!"
அம்மா செந்தாமரை அவர்கள் திராவிடர் - தமிழ்ப் பெண் குலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு; அவரும், 72 வயதிலும் போராடத் துணிந்த ஒரு முறுக்கேறிய 'வாலிப' முதியவரின் துணிவு வியக்கத்தக்கதாகும்.
மனிதர்களுக்கு - நமக்கு - சோதனைகள் ஏற்படும்போது இப்படித் துணிந்து எதிர் போராட்டம் நடத்திட வேண்டும்.
"அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்"
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
"ஓடிவந்த புலியதனைத் துரத்தினாளே
தமிழ் மறத்தி ஒருத்தி முறத்தினாலே" என்று அண்ணா எழுதிய சொர்க்கவாசல் திரைப்படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராசாமி, உடுமலையார் பாடலை தனது வெண்கலக் குரலில் பாடுவார். அது திரைப் பாட்டு. ஆனால் மேற்காட்டிய வீரம் புற நானூற்றுத் தாயின் வீரத்தை நேரில் கண்டு வியக்கும் எசப்பாட்டு! நிசப்பாட்டு!
பெண் குழந்தைகளை, பெற்றோர்களே அடக்கி அடக்கி அச்சத்தில் எப்போதும் ஆழ்த்தி, 'பேய், பூதம், அஞ்சுகண்ணன்' என் றெல்லாம் சோறு ஊட்டும் போதே பயத்தை ஊட்டி வைத்தால் இப்படிப்பட்ட கொடூர நிகழ்வுகளால் அவர்கள் உயிர் பலியாவார்கள்! எதிர்க்கவும் துணிவு வராது.
ஒருபோதும் அவர்கள் "செந்தாமரை - சண்முகவேல்" ஆக முடியாது.
வள்ளுவர் குறளுக்கு இந்நிகழ்வு ஒரு புதுப்பொருள் தருகிறது!
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள்
பழைய பொருள் எப்படி இருந்தாலும்கூட, தற்காத்தார் - செந்தாமரை - தற்கொண்டா னையும் - பேணி காத்தார்!
'சோர்விலாது' விரட்டி வியந்த உலகத்தின் பாராட்டு மழையில் நனைகிறார்கள் அவ்விருவரும்!
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா!"
கவியரசு கண்ணதாசன் எழுதிய 'மன்னாதி மன்னன்' பாட்டுக்குப் புது விளக்கம் தானே இது! - இல்லையா? வாழ்க துணிவின் தூய உருக்கள்!
விடுதலை நாளேடு,14.8.19

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நட்பின் கனிவு தரும் மகிழ்ச்சி



கி.வீரமணி


'நண்பர்கள்' என்பவர்கள் நாம் வாழும் சமுகத்தில்  - குமுகாயத்தில் 'உண்ணும் உணவு போன்றவர்கள்' என்பதை நாம் அனைவரும் மனதில் இறுத்தி நட்புறவைத் தேர்வு செய்து வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் இன்றி யமையாதது.

நல்ல உணவு சரியாக செரிமானமாகி, உட லுக்குப் பலத்தை சேர்க்கிறது; நோய் எதிர்ப்புச் சக்தியினை வளர்த்து வாழ வைக்கிறது.

கெட்ட உணவு - அதாவது கெட்டுப் போன உணவு அல்லது உடம்புக்கு ஒத்து வராத உணவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, உடலில் தொற்று நோய் - இவை ஏற்பட மூல காரணமாக ஆகி விடுகிறது!

பசி எடுப்பது நல்ல அறிகுறி - சீரிய உடல் நலனுக்கு; அதுபோல பண்புடைய - இடுக்கண் களைய, வேட்டி அவிழ்ந்தவன் கைகள் விரைந்து செயல்படுவதைப் போன்ற துடித்துப் பாய்ந்து உதவிடும் நண்பர்களைத் தேர்வு செய்வது மிகுந்த பயன் தரும்.

'பார்த்தால்' 'அந்தப் பசி' - நட்பு தேடல் - 'பசி தீரும்' என்பதை இப்படியும் பொருள் கொள்ளலாமே!

நீண்ட காலம் பழகி விட்ட நண்பர்களுக்குக் கூட தவிர்க்க முடியாத சில (தீய) பழக்க வழக்கங்கள் இருக்கலாம். என்றாலும் அவர் களுடைய வற்புறுத்தலுக்குக்கூட நாம் இணங்கி நமது தனித் தன்மையான ஒழுக்கத்தை இழந்து விடத் தேவையேயில்லை. உறுதி மிக்க உள்ளத்தவனை யாரும் எதுவும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது திண்ணம்.

தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்;

"நான் எனது (40 வயதில்) நெருங்கிய சகாக்களான நண்பர்களுடன் பழகும்போது, அவர்கள் மது குடிப்பார்கள்; நான் அதன் ஒரு  சொட்டைக்கூட ருசி பார்த்ததே இல்லை! அவர் களுக்கு நான் ஊற்றிக் கொடுத்துக் கூட இருக்கிறேன். அதை அதிகமாக குடித்த கார ணத்தால் போதை தலைக்கேறி அவர்கள்கூட என்மீது துப்பி, என்னைக் குடிக்க வற்புறுத் தியதும் உண்டு.

சுற்றுச்சூழல் பல மனிதர்களைக் கெட்டு விடக் காரணமாகிறது என்று சொல்வதை என் விஷயத்தில் நான் பொய்யாக்கி இருக்கிறேன். நான் சிரித்துக் கொண்டே முகத்தைத் துடைத்துக் கொள்வேன். அவ்வளவுதான்!" மகத்தான மன உறுதி படைத்தவர்களை எந்த அழுத்தத்தாலும் மாற்றிவிட முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்!

ஒருமுறை தானே  என்று முதலில் தவறு செய்பவர்கள் பலர் உண்டு; அதில் சறுக்கி விட்டால், அந்த சறுக்கலும், வழுக்கலும்  வாழ்நாள் முழுவதும் கைவிடப்பட முடியாத பலவீனங்களில் ஒன்று ஆகி, நம்மை வாட்டி வாட்டி வதைக்கும் - மறவாதீர்கள்!!

வள்ளுவர் குறளில் 79ஆவது அதிகாரம் 'நட்பு', (நட்பின் சிறப்புக் கூறுதல்) 80ஆவது 'நட்பாராய்தல்' - 20 குறள்கள் நமக்கு நல்ல வழிகாட்டும் நெறிமுறைகள்.

அவற்றை கற்பதோடு, அதற்குத் தக நிற்கவும் - ஒழுகவும் - பழகிக் கொள்ளுங்கள். அதிகாரம் 79 - "நட்பின் சிறப்பு" பற்றி கூறுகையில்,

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு".


(குறள் - 781)

நட்பு செய்வதுபோல் அருமையான செயல் வேறில்லை. நட்பு போல செயலுக்குப் பாதுகாப்புத் தருவதும் வேறில்லை.

இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள உதவும் -  ஓடோடி வரும் நட்பு முதன்மையானது அன்று. நண்பருக்குத் துன்பம் வரும்போது, ஓடோடி அதன் விளைவு எதுவாக இருப்பினும் அதுபற்றி அஞ்சாது - அதை ஏற்போன் நம்மை பாது காப்பது, நண்பருக்கு ஆறுதல் தர என்று ஓடோடி வந்து ஆறுதல் கூறும் நட்பு தரும் நயத்தக்கப் பண்பு, பிறருக்கு எப்படித் தோன் றிடினும் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியை மன நிறைவை அது ஊற்றெடுப்பாகப் பெருக்கும்.

எனது வாழ்வில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளைக் கூறுவேன் - இதற்கு விளக்கமான பொழிப்புரை போன்று நிகழ்ந்தவை அவை.

(நாளையும் சந்திப்போம்)

- விடுதலை நாளேடு, 2.8.19