பக்கங்கள்

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (9)


4

புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க முறை!

'கேட்டலும் கிளத்தலும்' என்ற 'கேள்வி பதில்' என்று ஏடுகளில் வருவதைப்போல அவர் நடத்திய "குயில்" வார ஏட்டில் வாராவாரம் கேள்விகளுக்கு அருமையான விடையளித்து கொள்கை பரப்பியதோடு, செம்மொழி தமிழில் இதற்கு முன் இருந்த புதையல் போன்ற புதுமையும் புத்தாக்கமும் நிறைந்த கருத்தியல்களை எளிமை யாக எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கவும் தவறவில்லை.

அவர் எத்தனை ஆண்டுகள் புதுவையில் அந்த பிரெஞ்சு அரசாங்கத்தில் இலக்கணம் - இலக்கியப் புலியாகத் திகழ்ந்து நல்லாசிரியராக உயர்ந்து தனது அறிவு வளத்தை ஒப்பற்ற கடல் போல் பெருக்கியதோடு அதனைப் பலருக்கும் கற்பித்தும் மகிழ்ந்தார்!

புதுவையில் மாநில திராவிடர் கழகத் தலைவராக, கண்ணாடிக் கடை உரிமையாளர் தோழர் ப.கனகலிங்கம் அவர்கள் இருந்தார்; குடும்பம் முழுவதையும் சுயமரியாதைக் குடும்ப மாக வைத்திருந்த கொள்கையாளர்  - பெரு வணிகரும்கூட! கடலூர் எஸ்.எஸ். சுப்பராயன் - ராஜேஸ்வரி ஆகியோருக்கு நெருக்கமான உறவு என்பதைவிட நெருக்கமான கொள்கை உறவும் கொண்டவர்! பல நிகழ்ச்சிகளில் இரு குடும்பத்தினரும் இணைந்தே வந்து அய்யாவை, அம்மாவை அவர்கள் வந்து சந்திப்பர். கனகலிங்கம் அவர்களது தந்தையார் - பட்டை போட்டிருக்கும் பசவலிங்கனார் என்ற பெரியவர் அய்யாவை அவர்கள் இல்லத்தில் கண்டுபேசி அய்யாவின் பகுத்தறிவு உரை கேட்டு முதுமையில் பட்டையை  கழித்து - கொள்கை மாறி கருஞ்சட்டைக்காரரானார்!

புதுவை செஞ்சாலைத் திடல் அன்று ஒரு பகுதியில் உண்டு. அதன் பக்கத்தில்தான் கழகத் தலைவர் கனகலிங்கம் அவர்களது வீடு - அங்கே தங்கியிருந்தபோது, செஞ்சாலைத் திடலில் ஒரு பொதுக் கூட்டம். அதில் தந்தை பெரியாரும், புரட்சிக் கவிஞரும் என்னையும் அழைத்திருந்தனர். கலந்துகொள்ளச் சென்றேன்.

புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்துள்ள படம் (தந்தை பெரியார் தலையில் -பனி காரணமாக ஒரு 'ஸ்கார்ப்!" மூலம் தலையில் கழுத்தைச் சுற்றிப் போட்டிருக்கும் படம் அந்த மேடையில்தான் எடுக்கப்பட்ட படம்!

மேடையில் - 'இராமாயணப் புரட்டு' என்பது தான் கூட்டத்தில் பேசப்படும் தலைப்பு -

நான், பண்டித ஜவகர்லால் நேரு சிறையில் இருந்தபோது தனது மகள் இந்திரா (10,12 வயது குழந்தை)வுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு ஆங்கில நூலைக் கையில் வைத்து, "இராமாயணம் உண்மையில் நடந்தது அல்ல; அக்கால ஆரிய - திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. திராவிடர்கள் என்பவர்கள் இன்று சென்னையிலும், அதன் பகுதி முழுவதிலும் வாழுபவர்களேயாவர்" என்று நேரு எழுதியதைப் பேசியவுடன் (ஆதாரம் காட்டி) பிறகு புரட்சிக் கவிஞர், "சாங்கியம் என்ற தத்துவ நூல்' - 'எண்ணூல்' என்று தமிழில் கூறுவர். அதுபோல சிவஞானபோதம், சுபக்கம், பரபக்கம் என்று இரண்டு தத்துவங்கள் மதங்களையொட்டி நிறைய பாடல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட் டாக, 'மாயமான்' தன்னை உண்மை மான் என்று நினைத்து போனவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று அக்காலத்திலேயே செய்யுள் மூலம் அப்பகுதிகளில் உள்ள பாட்டுக்களை மேடையில் பாடிக்காட்டினார். சிவஞான போதம் என்று கூறினார் என்று நினைவு. கவிஞர் பேசி முடித்தவுடன் அக்கவிதை பற்றி அப்போதுதான் முதன் முறையாக அறிந்ததால் கேட்டேன். அந்த "இந்திரா காந்திக்கு கடிதங்கள்" நூலின் மேல் சாணிக் கலரில் நான் அட்டை போட்டு வைத் திருந்த அந்தப் புத்தகத்தினை வாங்கி அதிலேயே அப்பாட்டினை தனது முத்து முத்தான, அழகான கையெழுத்தில் பொறுமையாக எழுதி எனக்கு மேடையிலே தந்தார் அந்த பெருங்கவிஞர் ஏறு!

பல காலம் பாதுகாத்து வைத்தேன். பிறகு எப்படியோ காணாமற் போனது!

என்னே அறிவுப் பரப்புதலில் ஆர்வம்! இளைய தலைமுறைக்குப் போதிக்கும் 'வாத் தியாராக' எப்படி கவிஞர் இறுதி வரையில் இருந்தார் பார்த்தீர்களா?

அதனால்தான் "பாரதிதாசன் பரம்பரை" என்று ஒன்று இத்தலைப்பில் உருவாகி அவர்கள் அடையாத புகழ் நாளில்லை என்றாக அமைந்து உயர்ந்துள்ளனர் போலும்!

பிரபலமான கவிஞர்கள் உவமைக் கவிஞர் சுரதா, முடியரசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டையார் போன்ற கவிஞர்கள் - பெரும் புலவர் நா. இராமநாதன், ஈரோடு தமிழன்பன் போன்ற ஆய்வறிஞர்களுக்கும் பஞ்சமில்லை. அந்த 'ஊருணி' இன்றும் என்றும் பயன்படுவதும், அறிவுத் தாகம் தீர்க்கும் என்பதிலும் எவ்வித மறுப்பும் கிடையாதே!

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)(8)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)

3

ஈரோட்டில் கோடை விடுமுறையின்போது தந்தை பெரியார் அவர்களது பழைய ஜங்ஷன் சாலையில் உள்ள, ஒரு பெரிய வீட்டில் (தந்தை பெரியாரது சொத்துக்களில் ஒன்று அது) அதில் ஏறத்தாழ, 2 வாரங்கள் பயிற்சி வகுப்பு - திராவிட மாணவர்களாகிய எங்களுக்கு எடுத்து முடிந்த வுடன் - சுமாராகவும், நன்றாகவும் கொள்கை களைப் புரிந்து பேசும் பக்குவம் படைத்த மாணவர்களில் ஒரு பகுதியினரை அய்யாவும் மற்ற பயிற்சி தந்த அடுத்த நிலை கழகப் பிரச்சாரகர்களும், 3 பேர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி, பல ஊர்களில் பிரச்சாரம் செய்ய அனுப்புவார்கள்  - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாணவக் குழுவினர் மாவட்ட அமைப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரின் ஆணைக்குக் கட்டுப்பாடாக கீழ்பட்டே   மாணவர்கள் நடப் பார்கள்; கழகக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதையும் மேற்பார்வை இடுவர்கள். எங்கள் நலம், பாதுகாப்பு எல்லாம் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலேயே விட்டு விடுவர். அவர்கள் மாணவப் பிரச் சாரகர்களான எங்களை சிறப்பாக கவனித்து சுமார் 20,25 கூட்டங்களை நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் ஏற்பாடு செய்து பேச வைத்து; பிறகு ஊருக்கு அனுப்புவார்கள்!

அப்படி நான் - 1945 என்று நினைவு - சேலம் மாவட்டம் (பழைய சேலம் மாவட்டம் - பிரிக்கப் படுவதற்குமுன்பு கிருஷ்ணகிரி வரை இந்தப் பக்கம் பரமத்திவேலூர் வரை என்ற பெரிய மாவட்டம்).

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் இன் றைய நூற்றாண்டு கண்ட நம்முடன் மகிழச்சியாக வாழும் அய்யா மானமிகு க.சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கி, பொத்தனூரில் மாலை கூட்டம் முடித்து, அடுத்த நாள் தவிட்டுப்பாளையம் கூட்டம் - காவிரி ஆற்று மணலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - கட்டிப்பாளையம் (தாடி) கண்பதி, 'ஆச்சிக்கண்ணு' என்றழைக்கப்பட்ட பழனிமுத்து போன்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள், பலரும்  இருந்தனர். வேலூர் (பரமத்திவேலூர்) புரட்சிக் கவிஞர் தனது மூத்த மருமகன் புலவர் கண்ணப்பனார் அவர்கள் வீட்டில் தன் மகன் கோபதி (பிறகு மன்னர்மன்னன்) மகள் சரஸ்வதி அம்மையாருடன் தங்கியிருந்தார்.

அவரையும் கூட்டத்திற்கு வந்து பேசுமாறு அழைத்தார்கள் உள்ளூர் கழக ஏற்பாட்டாளர்கள்! மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர் அவர்களது அழைப்பை ஏற்றார். அப்போது இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு இப்போது இருப்பதுபோல பாலம் கட்டப்படாததால் 'பரிசல்' மூலமே அக்கரைக்குச் செல்ல முடியும்.

ஆற்று மணலில் மாலை கூட்டம்  - 6.30 மணி அளவில் துவங்கி மற்றவர்கள் எல்லாம் பேசி முடித்து விட்டனர். இறுதியில் சுமார் இரவு 9 மணியளவில் புரட்சிக் கவிஞர் பேச ஆரம்பித்தார். நின்று கொண்டு வேட்டியை எடுத்து இரண்டு கால்களிடையே சொருகிக் கொண்டு வலது கைகளின் விரல்களையும் பயன்படுத்தி இடி முழக்கம் செய்கிறார்!

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 12 மணி அளவில்- ஆற்று மணல் பரப்பில் கூடியிருந்த கூட்டத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு சென்று விட்டனர்! ஒரு சிலரே கேட்கின்றனர்! புரட்சிக் கவிஞர் இடியோசை நின்ற பாடில்லை - நெருப்புத் தெறிக்கும் சீர்திருந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் எரிமலை என வீழ்ந்து கொண்டே இருந்தது. கேட்டு ரசிக்கத்தான் போதுமான கூட்டம் இல்லை.

அய்யா க.சண்முகமும் மற்ற தோழர்களும் சேர்ந்து ஒரு சீட்டு எழுதி, இரவு மணி 12 என்று நினைவூட்டி பேச்சைமுடிக்க எழுதியபடி துண்டு சீட்டு - அதை அவரது மகன் மன்னர்மன்னன்  மூலம் கொடுத்தனுப்பினர்.

அவர் சிறிது நேரம் கவிஞர் பின்னாலேயே நின்ற வண்ணம் உள்ளார். இவர் ஆவேசத்தில் அவரைக் கவனிக்கவில்லை; அவர் கவிஞர் அவர்களை வருடி 'அப்பா, அப்பா' என்றார்.

கவிஞர் சற்று கோபமாக? பெருத்த குரலில் என்ன? என்றபடியே திரும்பிட - அவர் இரவு 12 மணி ஆகின்றது பெரும்பாலானோர் கலைந்து விட்டனர்.  சிலரே உள்ளனர். எனவே, சீக்கிரம் முடியுங்கள் - என்று கழக முக்கியத்  தோழர்கள் கூறுகின்றனர் என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

உடனே திரும்பி, "அட, போறவன் போறான் இருக்கிறவன் இருக்கின்றான். நீ போய் உட்கார்ந்து கேள்! என்று கூறி விட்டு பேச்சை முடிக்காமல் தொடர்ந்து மேலும் ஒரு அரை மணி நேரம் எடுத்து முடித்தார்!

நாங்கள் சிலரே ஒற்றைப் படை எண் 'பட்டாள மாய்' கடைசிவரை கேட்டு - மணற்பரப்பில் ஆழ்ந்து    "தூங்கிய தமிழனை தமிழ் கொண்டு எழுப்பி" விட்டு பிறகு அனுப்பினோம்!

அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு சிலர் திருந்தினால் போதும் என்றே கருதிய பிரச்சாரம் அந்நாளில்....

(வளரும்)

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8)

5

முன்பு சட்டக் கல்லூரியில் படித்த மாணவர் களுக்கென தனி மாணவர் விடுதி (Hostel) கிடையாது. 

சென்னை பிராட்வே சாலையில் 'University Students Club'  - 'யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பு நடத்திய விடுதியில்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கிப் படிப்பது வழமை. (சில மாணவர்கள் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் அருகில் இருந்த வெங்கடேசுவரா விடுதியிலும் சேர்ந்து படிப்பார்கள்).

நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் (1957-59) பிராட்வேயிலிருந்த அந்த விடுதியில்தான் தங்கிப் படித்தேன். முதலாண்டு பெரும்பாலும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி  - போராட்டங்கள் இவை களை அன்னையார் உடன் இருந்து பார்க்கும் பணியை அய்யா, சிறைக்குப் போகுமுன் எனக்கு ஆணையாக இட்டதால் அதிலே செலவு செய்தேன்.

(எனக்குப் பதிலாக நண்பர் கோ. சாமிதுரைதான் வருகைப் பதிவை "Proxy- பிராக்சி" கொடுத்தவர்.)

கடைசி ஒரு வாரத்தில் நானே புத்தகங்கள் வாங்கி ஒவ்வொரு பாடத்தையும் படித்துத் தேர்வு எழுதி F.L. என்ற முதலாண்டில் 5 மார்க்குகள் குறைவானதால் ('ஃபெயில்') தோல்வி அடைந்தேன். அதுவும் ஒரு தேவையான அனுபவமே  - வாழ்க்கையில் என்று தேற்றிக் கொண்டு அடுத்தத் தேர்வில் மூன்று - நான்கு மாதங்களில் - வெற்றி பெற்றேன். எனது நண்பர் கோ. சாமிதுரையும் எனக்குத் 'துணையாக' தேர்வு எழுதும் வாய்ப்பு - 'பெயில்' ஆனதால் பெற்றார். இருவரும் வெற்றி பெற்றோம் - அடுத்த கல்வியாண்டில்  B.L.  வகுப்பில் தொடர்ந்தோம்.

அந்த விடுதி மாணவர் தலைவர் தேர்தலுக்கு எங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட கோ. சாமிதுரை அவர்கள் வெற்றி பெற்றார். அவரை'Mess Captain'  - என்று அழைப்பார்கள். விடுதி நிர்வாகம் பெரிதும் மாணவர் தலைவர் மேற்பார்வையில் நடைபெறும் முறை அதனால் உண்டு.

இரண்டாம் ஆண்டு (B.L. வகுப்பு மாணவர்கள்) அந்த விடுதியில் தங்கியிருந்த போது, புரட்சிக் கவிஞர் அவர்கள் பிராட்வே அருகில் உள்ள அவரது புத்தக பதிப்பகங்களான பாரி நிலையம் (திரு. செல்லப்பன் அதன் உரிமையாளர்) - செட்டி நாட்டுக்காரர்களே பெரிதும் பதிப்பகச் செம்மல்கள் அப்போதும் இப்போதும்! வணிகத்தைவிட இயல் பான தமிழ்ப் பற்றே அதற்கு முக்கிய காரணம். 

எங்களுடன் விடுதியில் வந்து ஓரிரு நாள்கள் மகிழ்ச்சியுடன் தங்கி, எங்களது அன்பான வரவேற்பினை - உபசரிப்பினை - உரையாடிப் பெற்று திரும்புவார் நமது புரட்சிக் கவிஞர் அவர்கள். பல நேரங்களில் அவருடன் அவரது மருமகன்களில் ஒருவரும் (தோழர் தண்டபாணி என்று நினைவு) உடன் வருவார். எங்கள் அறைகளில் அவர்களைத் தங்க வைப்போம்.

எங்கள் விடுதியில் புலால் உணவை மிகச் சிறப்புடன் தயார் செய்ய - (இயல்பாகவே சிறப் பான சுவையுடன் கூடியது) தனி ஏற்பாட்டினை Mess Captain' கோ.சாமிதுரை மூலம் நாங்கள் செய்விப்போம்.

புரட்சிக் கவிஞர், விடுதியில் உணவு பரிமாறப்படும் பகுதிக்கே எங்களோடு வந்து அமர்ந்து உண்டு கலந்துரையாடிக் கொண்டே சாப்பிடுவார். இவரது கம்பீரமானத் தோற்றம், மிடுக்கான பார்வை, உரையாடல் கண்டு பிற மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விசாரித்துத் தெரிந்து, தனியே அவரிடம் வந்து மரியாதை செலுத்துவர்.

வயதான பெரியவர் சமையல் 'நளன்களில் ஒருவர்! அவருக்குப் பெயரே 'ஆம்லெட் நாயர்' என்பது - அவ்வளவு சுவையாக, விரைவாக அதனை வியந்து சுவைக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக சமைத்துத் தரும் முதியவர்!

அதையும்  சுவைத்துச் சாப்பிடுவார்!  அருகில் ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் பாரி நிலையப் பதிப்பகம். செல்ல 'ரிக்ஷா' ஏற்பாடு செய்ததுண்டு சில நேரங்களில் - கவிஞருக்கு.

அங்கே 'ஒட்டல் கிரசெண்ட்' என்று ஒரு உணவகம் உண்டு.

சுவையான புலால் வகையறாக்கள் கிடைக்கும். அதில் நாங்கள் மாணவ நண்பர்கள் -  என்னுடன் கோ. சாமிதுரை, வேலூர் வழக்குரைஞர் செந்தாமரை முதலியோர் சென்று கூட்டாக அவருக்கு அன்பு 'விருந்து' ஏற்பாடு செய்வோம். 'மூளை வறுவல்' அதன் ஸ்பெஷாலிட்டி அதைச் சுவைத்து சுவைத்துச் சாப்பிடுவார். விடுதியி லிருந்து எங்களுடன் பேசிக் கொண்டே நடந்தே வருவார். இருமருங்கிலும் நடந்து செல்பவர்கள் சிலர் புரட்சிக் கவிஞரை அடையாளம் கண்டு வணக்கம் செலுத்துவர்!

ஓட்டல் கிரசெண்ட்டில் புலால் உணவு சாப்பிடும்போது, வேடிக்கையாகப் பேசுவார் கவிஞர். "'உன் உடம்புலே எது எது வீக்கா இருக்கோ' அதனை ஈடுகட்ட அந்தந்த பாகம் வாங்கி சாப்பிடு, சரியாயிடும்!" என்பார் சிரித்துக் கொண்டே!

எங்களுடன் உணவு  - விருந்து சாப்பிடுவதில் அவருக்கு ஏற்பட்ட அளவற்ற மகிழ்ச்சியில் மாளும் புரட்சிக் கவிஞர் எங்கள் அறையில் எளிமையாய் தங்கி- பழகி, உடன் உண்ணல் முதலியவற்றை நடத்தியது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் பெற்ற பெருமை மட்டுமல்ல - எல்லையற்ற உரிமையும் கூட.

('யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' விடுதி பிராட்வேயில் பழைய  'ஜனசக்தி' அலுவலகம் எதிரில் தான்!) புரட்சிக் கவிஞருக்கு எங்களிடம் அளவற்ற பாசம் உண்டு!

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (5)(6)

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3),(4)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3)

2

புரட்சிக் கவிஞர் மாணவர்களிடமும், இளை ஞர்களிடமும் அளவளாவுவதில் மிகுந்த ஆர்வ மும், மகிழ்ச்சியும் கொள்வார்!

புதுமையானதும் வினோதமானதுமான எதனையும் பார்த்தால், சிறு குழந்தையாகவே மாறி விடுவார்! வாயைப் பொத்திக் கொண்டு, கையை ஒருவகையாகக் காட்டி அதிசயமானதை ரசிக்கும் அவரது பார்வையும், உடல் அசைவுகளும் தனி அலாதி ரகம்!

மற்ற நேரங்களில் - மேடைகளில், கர்ஜிக்கும் சிங்கமா இப்படி சிறு குழந்தை ஒரு புது பொம்மையைப் பார்த்துப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவதுபோல் மாறுகிறார் என்பதை எளிதில் எவராலும் எண்ணிப் பார்க்கவே முடியாது!

சில நேரங்களில் அவர் தனது வியப்பினை வெளியிட்டு, பாராட்டின் உச்சத்திற்கும் சென்று வெளியிடும் அந்த குழைவு நிறைந்த மகிழ்ச்சியை அருகில் இருந்து காணுவோருக்கு ஓர் அரிய அற்புதக் காட்சியேயாகும்!

"..... ஏம்ப்பா, நம்ம இராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கான் - என்னைப் பற்றி - என் கவிதை களைப் பற்றி! ("கவிஞரும் காதலும்") என்னம்மா எழுதியிருக்கான்! எனக்கே தெரியலே - நாம் இப்படி எழுதியிருக்கோமான்னு! அப்பப்பா சொல்... எப்படி சொல்றது! நீ படிச்சிருக்கியா? படி அதை.

இந்தப் புள்ள எழுதனதைப் படிச்சப் பிறகுதான் இப்படி நான் எழுதியிருக்கேனான்னு எனக்கே புரிஞ்சுது!"

நெஞ்சத்தின் அடியிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த பெரும் பாராட்டு எப்படிப் பொங்குகிறது பார்த்தீர்களா? 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவனாக அப்போதே இண்டர்மீடியட் வகுப்பில் (தற்போதுள்ள 11, 12ஆம் வகுப்புக்குச் சமம் அது) சேர்ந்தேன் - அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டப்படி தமிழ் வகுப்பு உண்டு. அதற்கு மதிப்பெண் உண்டு. புலவர் கா.வெள்ளை வரணானார், பண்டித அருணா சலம் பிள்ளை, புலவர் பூவ ராகவன் பிள்ளை (இவர் சிதம் பரத்திலிருந்து ஒரு மாட்டு வண் டியை அவரே ஓட்டிக் கொண்டு வரும் பெரும் (வைதிக) புலவர்), புலவர் சோமசுந்தரம் பிள்ளை - துறைத் தலைவர் டாக்டர் 

அ. சிதம்பரநாதனார், பண்டித லெ.பெ.கரு. இராமநாதன்  பிள்ளை, ஜி. சுப்ரமணிய பிள்ளை போன்றவர்கள் அருமையான பேராசிரியர்கள். 

அவர்களது தமிழ் வகுப்பு மிகவும் ஈர்ப்பு நிறைந்ததாக இருக்கும். பல்கலைக் கழகப் பாட நூலை - இண்டர்மீடியட் இடைநிலை வகுப்புத் தமிழுக்குரியதைத் தயாரித்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு விலைக்கு - வழங்கப்படும்.

அதேபோல் பிரெஞ்சு மொழிக்கும்கூட அதற்குப் பதிலாக எடுக்க விரும்புகிறவர்கள் எடுத் துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

பிரெஞ்சுப் படிக்க 2, 3 மாணவர்கள் அதிகபட்ச 5 மாணவ  - மாணவிகளே சேர்வர். வாரத்தில் இரண்டு வகுப்புகள் - இரண்டு நாள்கள் "அபெல் குளோவி" என்ற பிரெஞ்சு கற்பிக்கும் பேராசிரியர் புதுச்சேரியிலிருந்து வந்து தங்கிக் கொண்டு  (வருகைப் பேராசிரியர் போல் இருந்து) பாட வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுப்பார்.

புதுச்சேரிக்கு அடிக்கடி போய் அங்கே பிரெஞ்சு மொழி பேசும் "மிஸி" (சார் என்று பொருள்)களின் பேச்சைக் கேட்டு வியந்தவன் நான். சிறந்த இலக்கிய மொழி பிரெஞ்சு மொழி என்ற பெருமையும் அதற்கு உண்டு!

ஆதலால் இண்டர்மீடியட் வகுப்பில் புதிதாக பிரெஞ்சு மொழி வகுப்பில் சேர்ந்து படித்தால் என்ன? மற்றொரு உலக மொழியை நாம் கற்றிருக்கும் வாய்ப்பும் கிட்டுமே என்று கருதி யோசித்தேன்.

நாள்தோறும் கடலூரிலிருந்து 30 மைல் தொலைவு ரயிலில் சென்று வந்திடும் நிலையில், பிரெஞ்சு வகுப்பினால், வாரத்தில் இரண்டு நாள் 'லெஷர்' வகுப் பிலாத ஓய்வு. அதனால் மற்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும் அது உதவுமே என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

என்றாலும் அது நம் தமிழ் மொழி வகுப்பை நாமே புறக்கணிப்பதுபோல ஆகாதா என்று எனது மற்றொரு கேள்வியும் மனப் போராட்டத்தை உருவாக்கி விட்டது!

மனக் குழப்பம் - மனப் போராட்டத்தை எப்படித் தீர்ப்பது - என்ன முடிவு காணுவது - என்று சிலநாள் யோசித்துக் கொண்டே தமிழ் வகுப்பிற்கு வழக்கம் போல் சென்று படித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு நாள் புரட்சிக் கவிஞர், புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியே வெளியூர் ரயிலுக்குச் செல்ல வந்தவர், முதுநகரில் வந்து வழக்கமாக ஒரு நாள் தங்கினார். நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று அவருக்குப் பணிவிடை செய்தோம்.

அப்போது கவிஞர் தனியே அமர்ந்து எதோ யோசனையில் இருந்தார். நான் மட்டும்தான் அவருடன் இருந்தேன். திடீரென எனக்கொரு யோசனை! பிரெஞ்சு மொழி படிக்கும் வகுப்பில் சேரும் மனக் குழப்பம் தீர கவிஞரையே ஆலோசனை, அறிவுரை கூறக் கேட்டால் என்ன என்று முடிவு செய்து அவரிடம் பேசினேன்.

என்ன சொன்னார் கவிஞர்?

(தொடரும்)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

3

புரட்சிக் கவிஞர் தான் கூறினார்: நன்கு ஆழ்ந்து கேட்டார். அதன்பிறகு "உன் முடிவு சரியானதுதான்; பிரெஞ்ச் மொழி இருக்கிறதே - அது இலக்கியத்தில் மிகுந்த மொழி மட்டுமல்ல... உலக சமாதான உடன்படிக்கைகளில் அந்த நாளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் மொழிதான் - அவரவர்கள் மொழியில் இருந்தாலும்கூட. காரணம் அந்த மொழியில் பல மாற்றப்பட முடியாததாக இருக்கும் வசதியை அது உள்ளடக்கியது; அஃறிணைப் பொருள் என்று நாம் அழைக்கும் கட்டில், மேஜை போன்றவைகள் ஒவ்வொன்றையும் ஆண் பாலா, பெண் பாலா எனப் பகுத்துப் பார்த்து பெயர் வைத்துப் புழங்கும் மொழி" என்று அதன் பெருமையை, முக்கியத்தை, அதனைக் கற்று, அறிவை பெறுவதின் தேவையை எனக்கு சில மணித்துளிகள் பாடம் எடுப்பதைப்போல் சொல்லியதோடு,

"நீ உன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் தமிழைவிட, கழகத்தினரால், நம்ம ஏடுகள், நம்ம பேச்சாளர்கள், எழுத்தாளர்களால் அறிந்து கற்கும் தமிழ் கூடுதலாக - "தூக்கலானது" (இது அவர் மொழி). எனவே நீ தமிழ் வகுப்புக்குப் போய்தான் அதனைக் கற்று வரப்போவதில்லை - அதிகம் தானே கற்றுக் கொள்ள முடியும். அதனால் நீ பிரெஞ்ச் எடுத்துப்படி - புதுச்சேரியில் இருந்து வரும் அந்த பிரெஞ்ச் வாத்தியார் அபெல் குளோவியை எனக்குத் தெரியும்; நானும் அவரைப் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர என்னை மிகவும் ஊக்கப்படுத்தி சேரச் சொன்னார்!

சிறிதும் தயக்கமின்றி நான் பிரெஞ்ச் வகுப்பில் அந்த வாரமே சேர்ந்து, பாட புத்தகங்களைப் பெற்று படிக்கத் துவங்கி விட்டேன்.

என் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாக, எவ்வளவு பெரிய மேதையிடமிருந்து, தமிழ்ப் பெய்த தனிப்பெரும் இமயப் புலவரிடமிருந்து கிடைத்தது என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

மற்றொரு செய்தி. புரட்சிக் கவிஞருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. பிரெஞ்ச் முப்பட்டை வண்ணம் போட்ட நேஷனல் சிக ரெட்டு தான் பிடிப்பார்; ‘நேசுனால்‘ என்ற பிரெஞ்ச் உச்சரிப்பை அவர் கூறுவார்.

கடலூர் வந்து தோழர் பி.ஏ.இளங்கோவன் சக்தி சீயக்காய் தொழிற்சாலையில் தங்கும்போது அவரிடம் பேச, பழக, விருந்தில் கலந்துகொள்ள ஒரு பெரிய “ஜமாவே‘ சேர்ந்து விடும்!

இறைச்சி உணவு, மீன், நண்டு, கோழி - இவைகள் எல்லாம்  விருந்து இலைகளில் அணி வகுத்து அடுத்தடுத்து வரும்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால் அதனையும் தோழர் இளங்கோ நன்றாக (உயர்வகை) ஏற்பாடு செய்து, பக்கவாத்தியங்களும் இருக்கும். என்னைப் போன்றவர்கள் கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்று அல்லது உணவுப் பந்தி வரிசையில் தள்ளி அமர்ந்து உண்போம்.

எவ்வளவு அருந்தினாலும் நிலை தடுமாற்றறமோ, அதிகமான குரல் உயர்த்தியோ, சில ‘குடிமக்கள்' உளறுவதைப்போல எதையுமே அவரிடம் காணவே முடியாது. கண்டதில்லை - அமைதி, புலால் உணவை சுவைத்துச் சுவைத்து நிதானமாக, பொறுமையாகச் சாப்பிடுவார்.

ஆங்கிலத்தில் "Mindfulness" (எதைச் செய்தாலும் அதிலேயே லயித்து ஈடுபாடு கொண்டு செய்வது) - (புத்தரின் அறிவுரைகளில் இதுவே முதன்மை) மனதை முழுமையாக அதற்கே அப்போது கொடுத்ததில் - வேறு கவனச் சிதறல் இல்லாத நிலை - அப்படியே உண்ணுவார் - அளவறிந்தே எல்லாம்!

பரிமாறிய ஒரு நண்பர் - அவரை ‘நாயிடு நாயிடு' என்றே தோழர்கள் கூப்பிடுவார்கள். அவர் மதுவைக் கூடுதலாக அருந்தி விட்டு, கவிஞருக்குப் பரிமாற தட்டை எடுத்து, இலையில்  உணவு வகைகளைப் போடத் துவங்க, ‘போதும்' என்றார் மெதுவாகக் கவிஞர். அவரோ "இல்லிங்கோ - இன்னும் கொஞ்சம்" என்று இளித்தபடி தள்ளாடி மேலும் எடுத்து வைக்க முனைந்தார். 

"ஏய், போதுன்னேன், போதுன்னேன், என்ன பரிவு என் மேலே? அறைவேன், அறைவேன் தெரியுமா?" என்று எச்சில் கையோடு குரலை உயர்த்திக் கூறினார். அவர் - அத்தனை பேரும் நடுங்கிவிட்டனர் - அவரை (நாயுடுவை) மற்றவர் அழைத்துச் சென்றனர். "ஏம்பா இவன் சாதாரண நேரத்தில் இப்படி உபசரிப்பானா? அவன் மேலே தப்பில்லை; அது பேசுகிறது அய்யா!" என்று தலை யில் அடித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார். 

- (தொடரும்)

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (2)


5

(இது 29.4.2022இல் எழுதத் தொடங்கி, விடுபட்டத் தொடர் - இதன் மூலம், இத்தலைப்பின் 2ஆவது "வாழ்வியல் சிந்தனைகள்" கட்டுரையாக வாசக நேயர்களுக்குத் தொடருகிறது. நினை வூட்டிய வாசகர் 'விடுதலை' பாஸ்கருக்கு நன்றி - ஆசிரியர்) 

புதுவையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் போது, ஒதியஞ் சாலைத் திடலில் பந்தல், முதல் நாளே சென்று கலைஞர் எழுதி, நடித்த சாந்தா அல்லது பழனியப்பன் நாடகத்தைப் பார்த்ததோடு அவரே அழைத்து நாடகத் திருமணத்தில் தலைமை தாங்கியதையும், அந்த நாடக மேடையில் பட்டுக் கோட்டை அஞ்சா நெஞ்சன் தளபதி  அழகிரிசாமி அவர்கள் தாளம் போட்டு பல காட்சிகளை  ரசித்துக் கண்ட பரவசத்தையும் பசு மரத்தாணி போல் பதித்து விட்டன - இன்னமும் மனசில்!

அதற்கடுத்து புதுவையில் கழகத்திற்கு எதிராக காலிகள் தேசியப் போர்வை போர்த்திக் கொண்டு ரகளையை ஆரம்பித்தனர்.

அந்தத் திடலுக்கு சற்று அருகாமையில் கலைஞர் - நாடகத்தில் நடித்தவரை குறி வைத்து விரட்டி அடித்துக் காயப்படுத்தி சாக்கடையில் தள்ள முயன்ற கொடுமையும் அரங்கேறிய நிலை.

"வாத்தியார்" கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) ஒரு ஆள் இழுக்கும்  கை ரிக்ஷாவில் ஏறி எதிர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் செல்லுகிறார்!

தந்தை பெரியாருக்கோ  ஏராளமாகத் திரண்டு வந்திருந்த தாய்மார்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை.

அன்றைய பிரெஞ்ச் - இந்திய காவல் துறையின் அலட்சியமும், மெத்தனமும் இதனை அய்யாவுக் குப் புலப்படுத்தின.

"மகளிர் முதலியோரை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்புங்கள் - பக்கத்தில்தான் பேருந்து நிலையம்" என தோழர் களைக் கேட்டுக் கொண்டார். பிறகு "மு.கருணாநிதி (கலைஞர்) என்ற ஒரு இயக்க இளைஞர்" அடி பட்டு சிகிச்சை பெறுகிறார் என்பதைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் அவரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.

புரட்சிக் கவிஞருக்கு உள் ளூர் அரசியலில் சில எதிரிகள் - தனிப்பட்ட பாதிப்புகள் காரண மாக இருந்ததே இந்த கலவரத் திட்டத்தின் அடிப்படை ஆகும். திராவிடர் கழகம் மீது  வெறுப்பு என்று  திட்டவட்டமாகக் கூற முடியாத நிலை.

புதுவையோடு அடிக்கடி தொடர்புடைய கடலூர்காரர்களாகிய நாங்கள் அங்கு இருப்பது வழமை. புரட்சிக் கவிஞர் வெளியூர்களுக்குப் பயணம் செய்ய கடலூர் (புதுநகர்) பேருந்து நிலையத்திற்கு வந்துதான் அங்கிருந்து பல ஊர்களுக்குச் சென்று திரும்புவார். பல நாள்களில் அவர் கடலூர் முதுநகர்  (Old Town) வருவார். அங்கேதான் கழகத் தோழர்கள் ஏராளம்.

சக்தி சீயக்காய்த் தூள் உற்பத்தி  கம்பெனி பிரபலமானது. அதில் ஒரு பெரிய கட்டடம், பல அறைகள் உண்டு.  பி.ஏ. இளங்கோ என்ற தோழர் தான் உரிமையாளர். தீவிர கொள்கையுள்ளம் கொண்ட என்னருந் தோழர். புரட்சிக் கவிஞர் அங்கே வந்து தங்கி, ஓரிரு நாள் கூட இருப்பார். அவருக்கு வேண்டிய "சகல சம்ரோக்ஷணை களையும்" தொண்டர் தோழர்களாகிய கருஞ்சட்டைக்காரர்களாகிய நாங்கள் அவர் மனமறிந்து, மனங்கோண விடாமல் செய்வோம். அவர் மகிழ்ச்சியோடு தான் விடை பெறுவார்! 

என்னை மாணவச் சிறுவன் - கழக இளைஞனாக அவர் அறிவார். பல மேடைகளில் புது வையிலும், என்னை அன்றைய புதுச்சேரி திராவிடர் கழகத் தலைவரும், பிரபல சகுந்தலா சாயப்பட்டறை தொழிற் சாலை உரிமையாளருமான தொழிலதிபர் பொன். இராமலிங்கம் அவர்கள் கழகப் பிரச்சாரத்திற்குப் பயன் படுத்தினார். அவர் காரை எடுத் துக் கொண்டு திடீரென கட லூருக்கு ஞாயிறு காலை அல்லது சனி காலை வருவார். நேரே எனது தந்தையையோ, ஆசிரியர் ஆ.திராவிட மணியையோ பார்த்து, "தம்பி வீரமணியைக் கூட்டத்திற்குஅழைத்துப் போகிறேன். பத்திரமாக நாளை காலைக்குள் அனுப்பி விடுவேன். படிப்பு பாதிக்காத வகையில் - கூட்டம் ஏற்பாடு செய்து விட்டேன் - வாத்தியாரும் பேசுகிறார். தம்பியும் (தானும் பேசினால் 'தான்' - என்னைக் குறிக்கும் புதுச்சேரி பாஷை) பேச வேண்டும்" என்று கூறி அழைத்துச் செல்வார். அவர்கள் வீட்டில் பலமான விருந்து  - கவனிப்பு எல்லாம். 

புரட்சிக் கவிஞர் குழந்தை மாதிரி பேச்சுக்குக் கை தட்டி மகிழ்வார்! யாராவது இடையில் சலசலப்புக் காட்டினால் சிங்கம் மாதிரி சீறுவார் - அந்தப் பார்வை - அவருடைய சிங்க முக கொத்து மீசை - அலங்கார 'முகபடாம்' எதிரிகளைச் சுட்டெரிக்கச் செய்வதுபோல் இருக்கும்.

'எவண்டா?' என்று ஓங்கிக் குரல் எழுப்புவார்? "இல்லங்க இல்ல நல்லா  பேசினதிற்குத்தான்  சத்தம்" என்றால் -  "அப்படியா போய் உக்கார்; பேசாதே கேள்!" - புரட்சிக் கவிஞர் பதில்.

(தொடரும்)


ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (3&4)

பொருளோடு வாழ்வா? வாழ்க்கைக்குப் பொருளா? (1&2)